உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

காலவரையற்ற விடுமுறை

சிதம்பரம்:
 
                       பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே தங்கியுள்ள குறிப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட வடமாநில மாணவர்களால்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டும் இதே மாணவர்களால்தான் பிரச்னை ஏற்பட்டது.​ ச ம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளக்கமளித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறியதாவது: 
 
                        விபத்தில் காயம் அடைந்த மாணவர் கௌதம்குமார் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அம்மாணவரின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறி புதுச்சேரி அருகே அம்மாணவரின் உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அம்மாணவர் உயிர் இழந்தார்.​ அதைத் தொடர்ந்து,​​ அம்மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 12.15 மணிக்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்னை சந்திக்க வந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.​ அவர்களிடம் மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் அறிக்கை பெற்று காலையில் பேசிக் கொள்ளலாம் எனக் கூறியதன் பேரில் மாணவர்கள் கலைந்துச் சென்றனர். அதன் பின்னர் மாணவர்கள் தேர்வுத் துறை கட்டடம்,​​ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள கண்ணாடி மற்றும் மின்விளக்குகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.​ 
 
                               அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் மாணவர்களை ​ விரட்டியடித்துள்ளனர்.​ நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பொறியியல் புலத்துக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டு விடுதிகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோட்டாட்சியர்,​​ வட்டாட்சியர் மூலமாக மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.​ இந்நிலையில் ஆற்றில் விழுந்து மாணவர் ஒருவர் இறந்துள்ளார்.​ இச்சம்பவம் துரதிஷ்டவசமானது.​ விடுதியில் தங்காமல் முத்தையா நகர்,​​ மாரியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட ​ மாணவர்கள்தான் இக்கலவரத்துக்கு காரணம் என தெரியவருகிறது.​ கடந்த ஆண்டும் அதே மாணவர்கள் இதுபோன்ற பிரச்னையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டு அபராதம் செலுத்தியுள்ளனர்.​ ​ஹோலி பண்டிகைக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சம்பவங்களில் குறிப்பிட்ட மாணவர்கள் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை அளிப்பது குறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துணைவேந்தர் எம்.ராமநாதன்.

Read more »

ரூ.​ 300 கோடி எங்கே?

கடலூர்,:

                      அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் தமிழகக் கல்வித் துறைக்கு ​ ஒதுக்கப்பட்ட ரூ.​ 300 கோடியை,​​ ​ கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அரசு மாற்றிவிட்டதாக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.அப்துல்மஜீது குற்றம் சாட்டினார்.

அவர் திங்கள்கிழமை கடலூரில் கூறியது:​ 

                      அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிகள்,​​ மேஜைகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளுக்கு மட்டும் மேஜை நாற்காலிகள் வாங்கப்பட்டன.​ ஆனால் அவற்றையும் ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி அகற்றி விட்டனர்.​  பெரும்பாலான பள்ளிகளுக்கு,​​ மேஜை நாற்காலிகள் வாங்கவே இல்லை.​ இதனால் செலவு செய்யாத உபரிநிதி ரூ.​ 300 கோடி ஆகும். இந்தத் தொகையை ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்துத்துக்கு ஒதுக்க இருப்பதாக அறிகிறேன்.​ இது முறையல்ல.​ தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்கிறார்கள். தரையில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டோம் என்ற போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். 71 ​ மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்தார். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது போல் அரசு பள்ளிகளில் மட்டும் ஆசிரியர்களை நியமித்தார்கள்.​ மீண்டும் 99 மாணவர்களுக்கு இரு ஆசிரியர் என்ற வழக்கமான திட்டப்படி,​​ உபரிஆசிரியர்கள் என்று கூறி பலருக்கு மாறுதல் அளித்து விட்டனர். முதல்வர் அறிவித்தபடி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவே இல்லை.​ முதல்வர் உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் நிறைவேற்றுவது இல்லை. வசந்திதேவி தினமணி பத்திரிகை கட்டுரையில் தெரிவித்தபடி தமிழகத்தில் தொடக்கக் கல்வி பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.​ இதை கல்வித்துறை அதிகாரிகள் மறைக்கிறார்கள். மத்திய அரசு 14 வயது வரை கட்டாயக் கல்வி என அறிவித்து இருக்கிறது.​ ஆனால் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்கள் இலவசக் கல்வியில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இத்திட்டத்தில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.​ அதை தமிழக அரசு ஏற்க மறுத்து,​​ இன்னமும் 99 மாணவர்களுக்கு இரு ஆசிரியர் என்ற பழைய திட்டத்தையே நிறைவேற்றுகிறது. இதனால் தொடக்கக் கல்வி பின்தங்கிய நிலைக்கு செல்லாமல் என்ன செய்யும்.​ ​ 381 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நீண்டகாலமாக நியமிக்கப்படவில்லை.​ அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும்,​​ மற்ற நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களையும் நியமிக்கிறார்கள்.​ மாணவர்களுக்குள் ஏன் இந்தப் பாகுபாடு?. தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 10 ஆயிரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் ஆசிரியர்களைத் திரட்டி வருகிறோம்.​ அவர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்றார் மஜீது.

Read more »

ரசாயன ஆலைக்கழிவுகளால் தோல் நோய்?

கடலூர்,:

                      கட​லூர் உப்​ப​னாற்றில் மீன்பிடித்த மீனவர் சண்முகம் தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.​ 

அவர் இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். 
 
                      கடலூர் உப்பனாற்றில் சிப்காட் தொழிற்சாலைகளின் மோசமான ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதாக,​​ பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் தொழிற்சாலைகள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.​ சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை கடலில் கலப்பதாகத் தெரிவித்து வருகின்றன.​ மாசுக்கட்டுப்பாடு வாரியமும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் உப்பனாற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்துவதும்,​​ அதன்பிறகு ஓசையின்றிப் போவதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. குற்றச்சாட்டுகள் மக்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும்,​​ ஆய்வின் முடிவுகளையோ,​​ அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையோ மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாகத் தெரிவித்தது இல்லை.உப்பனாற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதற்கு ஆதாரமான நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது.​ கடலூரை அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வி.சண்முகம் ​(40).​ கடந்த பிப்ரவரி 26-ம் தேதி காலை 10 மணிக்கு,​​ சிப்காட் தொழிற்சாலைகளுக்குப் பின்புறம் உள்ள உப்பனாற்றில் சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்.வலை உப்பனாறின் உள்ளே சிக்கிக் கொண்டது.​ அதை எடுப்பதற்காக உப்பனாற்று நீரில் கழுத்தளவுக்கு மூழ்கியபோது,​​ தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது.​ வீடு திரும்பியதும் எரிச்சல் அதிகரித்தது.சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.​ எனவே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து,​​ ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.எனினும் அவருக்கு தொடர்ந்து அரிப்பும்,​​ உடல் நலம் பாதிப்பும் இருப்பதால்,​​ தோல்நோய் நிபுணரிடம் காண்பிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இது குறித்து புகார் மனு ஒன்றை சண்முகம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் அளித்தார்.​ உடலில் பல இடங்களில் வடுக்கள் இருப்பதையும் ​ காண்பித்தார். கடலூர் உப்பனாற்றில் மீன்பிடிக்கும்போது அடிக்கடி,​​ இத்தகைய ​ நிலை ஏற்படுவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.​ மீனவர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பழநிவேல்,​​ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அருள்செல்வம்,​​ புகழேந்தி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

Read more »

கடலூரில் கடும் மூடுபனி

கடலூர்:
 
                          கடலூரில் திங்கள்கிழமை காலை கடும் மூடுபனி காணப்பட்டது.​ ​கோடைகாலம் தொடங்கி விட்டது.​ எனினும் வழக்கத்துக்கு மாறாக பனிக் காலம் ​ மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது.​ பகல் நேரத்தில் கடுமையான வெயிலும்,​​ பின் இரவில் பலத்த குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை பனி நீடித்தது.​ காலை 6 மணிக்கெல்லாம் சாலைகளில் 50 அடி தொலைவில் வரும் வாகனங்களைக் கூட பார்க்க முடியவில்லை.​ குளிரும் கடுமையாக இருந்தது. காலை 7-30 மணி வரை சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன.​ 7-30 மணிக்குப் பிறகே சூரியன் தனது முகத்தை மெல்லக் காண்பித்தது.​ அதைத் தொடர்ந்து பனி விலகத் தொடங்கியது

Read more »

அண்ணாமலை பல்கலை மாணவர்கள் இருவர் இறந்ததால் ரகளை கட்டடங்கள் நொறுக்கப்பட்டன: போலீசார் குவிப்பு

சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த வெளி மாநில மாணவர்கள் இருவர் இறந்த சம்பவத்தால், மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள், வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஐ.ஜி., துரைராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 5,000க்கும் அதிகமான வெளி மாநில மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியில் தங்கியுள்ளனர். பல்கலையின் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்த மாணவர் கவுதம்குமார் (20), சிதம்பரம் கீழத் தெரு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள காம்ப்ளக்சில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.கவுதம்குமார் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, நண்பர் கவுரவ்குமாருடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, எஸ்.பி., கோவில் தெருவில், லாரி மோதி படுகாயமடைந்தார். உடனே அவரை அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்குப் பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சக வெளி மாநில மாணவர்கள் 500 பேர், பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் கவுதம்குமார் இறந்ததாகக் கூறி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு துணைவேந்தரை சந்திக்க, அவரது பங்களா முன்பு திரண்டனர். மறுநாள் காலை விளக்கம் அளிப்பதாக துணைவேந்தர் கூறினார். இதையடுத்து, மாணவர்கள் மறியல் செய்தனர். பின், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கி சென்றனர். வழியில் தேர்வுத் துறை அலுவலகம் மீது கல் வீசி, கண்ணாடிகளை உடைத்தனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளை சரமாரியாக தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். மருத்துவமனை முன்பு நின்றிருந்த வேன், பஸ் ஆகியவற்றையும் உடைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார்,  மாணவர்களை விரட்டி அடித்தனர்.
 
               அப்போது, போலீசுக்கு பயந்து ஓடிய மாணவர்கள், முத்தையா நகர் செல்லும் வழியில் உள்ள பாலமான் வாய்க்காலில் குதித்தனர். ஒருவர் மீது ஒருவர் குதித்ததில் ஜார்கண்ட் மாநிலம் கர்சலான் மாவட்டம், கம்மாரியா ஜர்கலி பகுதியைச் சேர்ந்த காமேஸ்வர் பிரசாத் என்பவர் மகன் சுமித்குமார் (22) தண்ணீரில் மூழ்கி இறந்தார். இவரும் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
 
               மாணவர் சுமித்குமார் இறந்ததால் மேலும் பதட்டம் ஏற்பட்டு, மாணவர்கள் குவியத் துவங்கினர். அதையொட்டி டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பதட்டம் காரணமாக, நள்ளிரவில் மாவட்டம் முழுவதும் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
                         மாணவர்கள் தண்ணீரில் குதித்த இடத்தில் வேறு மாணவர்கள் யாராவது மூழ்கியுள்ளனரா என நேற்று காலை முதல் தீயணைப்பு படையினர் தண்ணீரில் இறங்கி தேடினர். இதற்கிடையே பிரச்னை ஏற்படாமல் இருக்க, இன்ஜினியரிங் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுதி மாணவர்கள் அனைவரும் போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி., துரைராஜ் தலைமையில் டி.ஐ.ஜி.,க்கள் விழுப்புரம் மாசானமுத்து, காஞ்சிபுரம் ராமசுப்ரமணியன், கடலூர், தஞ்சை, நாகை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு எஸ்.பி.,க்கள்,  பல்கலையில் முகாமிட்டுள்ளனர்.  அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி வளாகம், துணைவேந்தர் மாளிகை,  இன்ஜினியரிங் கல்லூரி வளாகம், நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மாணவர் சுமித்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது குறித்து அண்ணாமலை நகர் போலீசார், சந்தேக மரணம் 174(1) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், பல்கலை கட்டடங்களை சேதப்படுத்தியதாக மருத்துவக் கல்லூரி காவலர் சசிக்குமார் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்: துணைவேந்தர் விளக்கம்

சிதம்பரம் : 

                     "விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது; அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்' என துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: 

                      விபத்தில் காயமடைந்த கவுதம்குமாருக்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணிக்கு 400 மாணவர்கள், "மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேச வேண்டும்' என, எனது பங்களா செக்யூரிட்டியிடம் கேட்டனர். "காலையில் பேசலாம்' என செக்யூரிட்டி கூறியதையடுத்து, சமாதானமாகி சென்று விட்டனர். மருத்துவக்கல்லூரி மருத்துவ அதிகாரி சண்முகத்திடம், சிகிச்சை குறித்து சான்று பெற்று, காலையில் மாணவர்களை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்திருந்தோம். இதற்கிடையே நிர்வாக அலுவலகம் நோக்கி சென்ற மாணவர்கள், தேர்வுத் துறை அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் கண்ணாடிகளையும், வாகனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை உடைத்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த போலீசார், மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாணவர் ஒருவர் பாலமான் ஓடையில் விழுந்து இறந்து விட்டதாக, உடலை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர். விடுதியை தவிர்த்து வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான், வேண்டுமென்றே பிரச்னையை தூண்டி விடுகின்றனர். கடந்த ஆண்டும், இதே போன்று பிரச்னை செய்தனர்; அவர்கள் யார் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
 
                   விடுதியில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு, போதுமான வசதி இல்லை. பெண்கள் அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், 60 சதவீத மாணவர்கள் மட்டுமே, தங்கக்கூடிய நிலை உள்ளது. புதிய விடுதி கட்டடம் கட்டப்படுவதால், அடுத்த ஆண்டு முதல், மாணவர்கள் அனைவரும் தங்க வைக்கப்படுவர். வெளியில் தங்கியுள்ள மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு பகுதியிலும் பகுதி அதிகாரி நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்கள் யார், வீடுகள், விடுதிகள் பற்றிய விவரங்கள், எங்கு செல்கின்றனர் என கண்காணிப்படும். இவ்வாறு ராமநாதன் கூறினார்.

Read more »

பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை! மேம்பாலமா, புறவழிச்சாலையா விரைவில் தெரியும்

பண்ருட்டி : 

                   பண்ருட்டியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டியில்  ரயில்வேகேட்  உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் விழுப்புரம் -மயிலாடுதுறை  இடையில் அகலப்பாதை அமைக்கும் பணி நடந்து வருவதால் கடந்த 3 ஆண்டுகளாக போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இருந்தது.
 
               தற்போது விழுப்புரம் - மயிலாடுதுறை இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்து கடந்த ஜனவரி மாதம் முதல் துவங்கியது. இதனால் சென்னை-கும்பகோணம் சாலையில் பண் ருட்டி ரயில்வே கேட்டில் இருந்து  நான்குமுனை சந் திப்பை கடந்து கும்பகோணம் சாலை வரையில் நீண்ட தூரம்  வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
 
            இதற்கு நிரந்தர தீர்வாக பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என  கடந்த 15 ஆண்டாக மத்திய,மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் எம்.எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கையின் பேரில் கடந்த 2007ம் ஆண்டில் ரயில்வே மேம் பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) சார்பில்  10 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு தயார் செய்து 2007 செப்டம்பரில் மண் பரிசோதனை செய்தனர்.
 
           பின்னர் சென்னை - கும்பகோணம் மாநில சாலை, தேசிய நெடுஞ்சாலை (நகாய்) கைமாறியதால் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில்வே பாதையில் பயணிகள் ரயில்கள் ஓடத் துவங்கினால் பண் ருட்டி முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்  கூட செல்ல முடியாத நிலை ஏற்படுவது உறுதி. ஆனால் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள் யாரும் முன்வராததால் இந்த ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் மேம்பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து தஞ்சாவூர் நகாய் மேலாளர் அதிபதி "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது: 

                      சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்  கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்கா, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் "லூயிஸ் பெர்ஜர் அண்ட் வேக்சின்' நிறுவனம் "டிபிஆர்' சர்வே நடத்தி வருகிறது. சாலை வளைவுகள், பாலங்கள் கட்டுவது, பைபாஸ்  உள்ளிட்ட பணிகளின் சாத்தியக் கூறுகள்  குறித்து சர்வே மற்றும்  திட்ட மதிப்பீடு செய்து வழங்குவர்.  சர்வே முடிவில் பண்ருட்டிக்கு பைபாஸ் கொண்டு வருவதா அல்லது ரயில்வே மேம்பாலம் கட்டுவதா என தெரியும் என்றார்.

Read more »

பிளஸ் 2 தேர்வு துவங்கியது

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 22 மையங்கள் என மொத்தம் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.தனித் தேர்வர்கள் 3,936 பேர் 12 மையங்களிலும், பார்வையற்ற மாணவர்கள் 14 பேர் மூன்று மையங்களிலும், உடல் ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சொல்வதை எழுதுவது ("ஸ்கிரைப்' ) 11 மையங்களிலும் தேர்வு எழுதினர். தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் தலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று தாய் மொழி தமிழ் முதல் தாள் என்பதால் மாணவ, மாணவிகள் "பிட்' மற்றும் காப்பியடித்து பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

தனது குடும்பம் வளம் பெறவே திட்டங்கள் கொண்டு வருகிறார் : செம்மலை

குறிஞ்சிப்பாடி : 

                         இந்தியாவில் உள்ள பல சிமென்ட் ஆலைகளில் கருணாநிதி குடும்பங்களுக்கு அதிக பங்கு உள்ளது என அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை பேசினார்.குறிஞ்சிப்பாடி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ரஜினிகாந்த் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் உமாதேவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், தலைமை பேச்சாளர் சோமசுந்தரம் பேசினர்.

அமைப்பு செயலாளரான எம்.பி., செம்மலை பேசியதாவது: 

                    கருணாநிதி பணம் சம்பாதிப்பதையே குறியாக உள்ளார்.  கஜானாவை காலி செய்து தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து வருகிறார்.  இலவச "டிவி' வழங்குவது மக்கள் நன்மைக்கு இல்லை. தன் குடும்பம் நடத்தும் "டிவி' சேனல்களுக்கு விளம்பரம் மூலமும் கேபிள் மூலமும் பணம் வசூல் செய்வதற்குதான்.
 
                       குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மருத்துவக்காப்பீட்டு திட்டம் என்று மக்களை மயக்கி கொண்டு இருக்கிறார். காப்பீட்டு திட்டத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்காமல் கருணாநிதி பேரன் தமிழ் நிர்வாக இயக்குனராக இருக்கும் ஸ்டார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு ஆண் டுக்கு மக்கள் பணத்தை 2 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்துவிட்டு 400 கோடி ரூபாயை கமிஷனாக பெறுகின்றனர்.
 
                         தற்போது கூரை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றப்போவதாக கூறி வருகிறார். நாட்டில் உள்ள பல சிமென்ட் தொழிற்சாலைகளில் கருணாநிதி குடும்பங்களுக்கு அதிக பங்கு உள்ளது. சிமென்ட் அதிகளவில் விற்பனை செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.என்.எல்.சி., தொழிலாளர்கள்  இந்த தொகுதி அமைச்சர் மீது வெறுப்பாக உள்ளனர். பொங்கல் போனஸ் பெற்று தர பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் தொழிலாளர்கள் கேட்ட 90 சதவீதம் பெற்று தராமல் நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசி தொ.மு.ச., நிர்வாகிகளை மிரட்டி 45 சதவீதத்திற்கு முடித்து விட் டார். தொழிலாளர்க்கு துரோகம் செய்து விட்டார். இவ்வாறு எம்.பி., செம்மலை பேசினார்.

Read more »

இலவச வீட்டு மனைக்கேட்டு ஏழு இடங்களில் மறியல் : விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 731 பேர் கைது

கடலூர் : 

                        குடிமனைப்பட்டா மற்றும் புதிய வீட்டுமனைப்பட்டா கோரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் மறியல் செய்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 340 பெண்கள் உள்ளிட்ட 731 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் குடிமனைப்பட்டா, புதிய வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாய நிலங்களை வேறு பணிக்கு மாற்றுவதை தடுக்க சட்டம் இயற்றவேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தினர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்,  குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக் குடி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 

கடலூர்: 

                  ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஒன்றிய தலைவர் குமார், கோதண்டம், அரசன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலாளர் சுப்ராயன் உள்ளிட்ட 250 பேர் அண்ணா பாலம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். 

சிதம்பரம்: 

                          ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் முன்னாள் எம்.எல்.ஏ., வீரைய்யன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநிலக் குழு மூசா, மாவட்டக்குழு நடராஜன், வாஞ்சிநாதன்,  ஊராட்சி தலைவர் ராஜசேகர் உள் ளிட்ட 120 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
 
திட்டக்குடி: 

                  மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ்  தலைமையில், வட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், ராஜேந்திரன், நகர செயலாளர்கள் வரதன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 57 பேர் தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி: 

                மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், வட்ட செயலாளர் ஏழுமலை, தனபால், உத்திராபதி, மணிவண்ணன், மா.கம்யூ., வட்ட செயலாளர் சேதுராஜன் மற்றும் 79 பெண்கள் உட்பட 150 பேர் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். 

விருத்தாசலம்: 

                   வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் வட்டசெயலாளர்கள் சின்னப்பராஜ், ஜெயமணி, வட்ட தலைவர் மதியழகன், பொருளாளர் முத்துசாமி மற்றும் 7 பெண்கள் உட்பட 49 பேர்  பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். 

குறிஞ்சிப்பாடி:

          குறிஞ்சிப்பாடியில் மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் 59 பேரும், 

காட்டுமன்னார்கோவில்:

                    காட்டுமன்னார்கோவிலில் மாநில குழு ராமசாமி தலைமையில் 46 பேர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 340 பெண்கள் உள்பட 731  பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

Read more »

அரசு கட்டுப்பாட்டில் உள்ள 37,000 கோவில்களை கையகப்படுத்த வாதாடுவேன் : சுப்ரமணியசாமி தகவல்

சிதம்பரம் : 

                     சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசிடமிருந்து மீட்பேன் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுப்ரமணியசாமி நேற்று வந்தார்.  அப்போது அவரிடம், கோவிலில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு செயல் அலுவலர் அலுவலகம் கட்டப்படுகிறது. கோவில் உள்ளே கார் நிறுத்துகின்றனர். விதிமுறைகளை மீறி பல இடங்களில் உண்டியல் வைத்துள்ளனர். சாமி வருவதற்கு கூட வழிவிடாமல் ஆயிரங்கால் மண்டப வாயிலில் கூட்டம் நடத்தினர் என தீட்சிதர்களும், ஆலய பாதுகாப்பு குழுவினரும் கூறினர்.
 
                அதையடுத்து செயல் அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுவரும் இடத்தை பார்வையிட்டார். அறநிலையத்துறை வைத்துள்ள பிரசாத கடையில் பிரசாதம் தயார் செய்யப் படுவது, விலை போன்றவற்றை விசாரித்தார். கோவிலுக்குள் சென்று உண்டியலை பார்வையிட்டார். பின்னர் சட்டையை கழற்றிவிட்டு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவிலை கண்டிப்பாக மீட்டு தருவேன் என தீட்சதர்களிடம் கூறினார். 

அப்போது அவர்  கூறியதாவது:

                        நடராஜர் கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இடித்து குளு, குளு வசதியுடன் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவது சட்ட விரோதமான செயல். ஐகோர்ட் தீர்ப்புப்படி 19 விதிகளில் ஒன்று கூட கடைபிடிக்கப்படவில்லை. சட்டத்தை மீறி உண்டியல் வைக்கிறார்கள். கட்டடத்தை இடிக்கிறார்கள். பல லட்ச ரூபாய் செலவு செய்கிறார்கள். கோவிலை அறநிலையத்துறை பொறுப்பேற் றதில் இருந்து இதுவரை 20 தவறுகள் செய்துள்ளனர். இதை ஆதாரத் துடன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன். கோவில் சம்மந்தமாக வழக்கு முடியும் வரை அறநிலையத்துறை நிர்வாகம் செய்வதற்கு இடைக் கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அது சம்மந்தமான விசாரணை வரும் 11ம் தேததி நடக்கிறது. அதில் நான் வாதாடுகிறேன். இந்த கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 37,000 கோவில்களையும் கையகப்படுத்த வாதாடுவேன்.டில்லி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த நவம்பர் 27ம் தேதி கோவில் வழக்கு தொடர்பாக 6 வாரத்தில் விளக்கம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு அவகாசம் தெரிவிக்கப் பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் கூடுதலாக ஆகும் நிலையிலும் எந்த விளக்கமும் தரவில்லை. அதனால் வழக்கு கோவிலுக்கு சாதகமாக அமையும். இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

Read more »

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல்


கடலூர் : 

                தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக தொழிலாளர் சங்க மண்டலப் பொதுக்குழு கடலூரில் நடந்தது.
 
                   மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர் முத்துசாமி வரவேற்றார். மண்டலத் துணைத் தலைவர் தனஞ்செயன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தட்சிணாமூர்த்தி வரவு செலவு அறிக்கையை படித்தார்.  கூட்டத்தில் மாநில இணை பொதுச் செயலாளர் ராஜேவேல், இணை செயலாளர் ஸ்டாலின் தேவசகாயம், போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பழனிவேல், பொதுச் செயலாளர் சிவகுநாதன் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் நடந்த தேர்தலில், தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் இளங்கோவன்,  பொருளாளர்  ஞானசேகரன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும்.  அ.தி.மு.க., ஆட்சியில் மறுக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

Read more »

மரக்கன்றுகள் நடும் விழா

கிள்ளை : 

                சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் மரக்கன்று நடும் விழா நடந்தது. சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம்  மரக்கன்று நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.  முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன், ஆலோசகர்  கனகசபை, செயலாளர் பாபு பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அப்துல்ரகீம், சந்திரசேகரன், பரங்கிப்பேட்டை அரிமா சங்க உறுப்பினர் ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பாலசுந்தரம், அரவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் முதுநகரில் தெப்பல் உற்சவம்

கடலூர் : 

           கடலூர் முதுநகரில் மாசிமகத்தையொட்டி வாண வேடிக்கைகளுடன் தெப்பல் உற்சவம் நடந்தது.
                கடலூரில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவையொட்டி தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத் தோப்பு வெள்ளரி அம் மன், அக்கரைகோரி கண்ணனூர் அம்மன், சலங்கைகார தெரு நாகமுத்தாலம்மன் கோவில்களிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் மீன்பிடி தளத்திற்கு படகு மூலம் கொண்டு வரப்பட்டது. வாண வேடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் சுவாமி தரிசனத்தைத் தொடர்ந்து  மீண்டும் கோவிலுக்கு  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதேப்போன்று தைக்கால் தோணித்துறை ஆற்றில் கருப்பு முத்தம்மன் சுவாமி தெப்பல் உற்சவமும் நடந்தது .கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

குருகுலம் பள்ளி மாணவர்கள் ஆயிரம் புத்தகங்கள் அன்பளிப்பு


குறிஞ்சிப்பாடி : 

                    வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு  ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் நினைவாக சென்னையில் புதியதாக அமைக்கப் பட்டு வரும் ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூலகத் திற்கு தங்கள் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்கள் அன் ளிப் பாக வழங்க முடிவு செய்து முதல் கட்டமாக ஆயிரம் புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கணேசமூர்த்தி முன்னிலையில் வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் டாக்டர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். மேலும் 4 ஆயிரம் புத்தகங்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் பள்ளி தாளாளர் செல்வராஜ் கூறுகையில்: 

             பள்ளி மாணவர்கள் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்களும், நிர்வாகத்தின் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்களும் சேகரித்து  அமைச்சர் பன்னீர்செல்வம் மூலம் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு தங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருக்கிறோம் என்றார்.

Read more »

வைத்தியநாத சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை


திட்டக்குடி : 

                திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக மகா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு குத்துவிளக்கு பூஜை மற்றும் 210 சித்தர்களுக்கான சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.
 
               கோவில் கும்பாபிஷேக திருப்பணி விரைவில் நடைபெறவும், உலக அமைதி, மனித நேயம், இயற்கை வளம், மத நல்லிணக்கம் வேண்டி 160 சுமங்கலி மற்றும் இளம் பெண்கள் இணைந்து சிறப்பு குத்துவிளக்கு பூஜை செய்தனர். இதனை மாதாஜி ரோகினி ராஜ்குமார் துவக்கி வைத்தார்.பெரம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி பக்தர்களுக்கு வேள்வி பூஜையுடன், ஆன்மிக உபதேசமும், சித்தர்கள் பூஜையை நடத்தி வைத்தார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் யோகா மாஸ்டர்கள் ரஷ்யா ஹலேக், மாஸ்கோ உல்டி கலந்து கொண்டு வைத்தியநாத சுவாமியை வழிபட்டனர். விழாவில் தொழிலதிபர் ராஜன், பேரூராட்சி தலைவர் மன்னன், துணைத்தலைவர் கமலி, திருப்பணிக்குழு கிருஷ் ணன், சிவக்குமார், வேணுகோபால், பாலகிருஷ் ணன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

தீயில் சிக்கிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி பலி


திட்டக்குடி : 

                தீயில் கருகிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியை சேர்ந்தவர் சீமான் மனைவி வேம்பாயி (35). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது, எதிர்பாராமல் அவர் மீது தீ பரவியது. இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சீமான் தீயை அணைக்க முயன்றார். அதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கடந்த 26ம் தேதி வேம்பாயியும், நேற்று முன்தினம் சீமானும் இறந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து வேம்பாயி தந்தை ராஜாங்கம் கொடுத்த புகாரின் பேரில்  பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

இரு மாணவர்களை காணவில்லை : தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர்கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சக மாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில்  இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Read more »

ரேடியோ செட் கட்டுவதில் தகராறு மூவர் காயம்; ஆறு பேருக்கு வலை


கடலூர் : 

                      கோவில் திருவிழாவில் ரேடியோ செட் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மூவர் காயமடைந்தனர். ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த எஸ்.புதூர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மாசி மகத்தையொட்டி அம்மன் கோவிலில் மூன்று ஸ்பீக்கருடன் ரேடியோ செட் கட்ட பில்லாளி தொட்டியைச் சேர்ந்த சொக்கலிங்கத்திடம் முன்பணம் கொடுத்திருந்தார்.  ஆனால் சொக்கலிங்கம் ஒரு ஸ்பீக்கருடன் ரேடியோ செட்டை கட்டினார். அதனை மணிகண்டன் தட்டிக் கேட்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தங்கராசு உள்ளிட்டோர் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர்களை தாக்கினர்.அதில் காயமடைந்த மணிகண்டன், முருகன், முத்துக்கிருஷ்ணன் மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தங்கராசு, விஜி, அஞ்சாபுலி, சுந்தர்ராஜன், பிரபு, சந்திரசேகர் ஆகிய 6 பேரை தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior