உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

11 பள்ளிகளுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் அளிப்பு


                  திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளிகளுக்குரிய, காணாமல் போன எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்களுக்குப் பதிலாக, தேர்வுத் துறை வழங்கிய புதிய சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் புதன்கிழமை அளிக்கப்பட்டன.

                    சென்னையிலிருந்து லாரி மூலம் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள லால்குடி, முசிறி, திருச்சி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்தார்.

                     அப்போது, 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,447 மதிப்பெண் சான்றிதழ்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கி. சுவாமிநாதன், சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குநருக்குத் தகவல் தெரிவித்தார். இதை அடுத்து, காணாமல் போன மதிப்பெண் சான்றிதழ்களுக்குப் பதிலாக, அதே பதிவெண் கொண்ட புதிய சான்றிதழ்கள் அச்சிட அரசின் அனுமதி பெறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலையே அச்சடிக்கப்பட்டன.

               தேர்வுத் துறை துணை இயக்குநர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் காணாமல் போன 1,447 மதிப்பெண் சான்றிதழ்களுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட புதிய சான்றிதழ்களை புதன்கிழமை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மதிப்பெண் சான்றிதழ்கள் காணமல் போன 11 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  உடனடியாக வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Read more »

வேளாண்மை பல்கலை.யில் கவுன்சலிங் துவக்கம்

                  கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் புதன்கிழமை துவங்கியது. முதல் நாளிலேயே பல்வேறு வேளாண் பாடப் பிரிவுகளில் 170 மாணவ மாணவியர் சேர்ந்துள்ளனர்.இளநிலை அறிவியல் பிரிவில் பி.எஸ்சி வேளாண் அறிவியல், தோட்டக் கலை, வனவியல், மனையியல் ஆகிய படிப்புகளும், இளநிலை தொழில்நுட்பப் பிரிவில் வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. வேளாண் பல்கலை.யில் சேர்வதற்காக 7,181 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1,561 பேர் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கவுன்சலிங்கை பல்கலை. பதிவாளர் சுப்பையன் துவங்கி வைத்தார். கவுன்சலிங்குக்கான கட்-ஆப் மதிப்பெண் காலையில் 198.25 இருந்து 189.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 154 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 77 பேர் பல்கலை.யில் சேர்க்கப்பட்டுள்ளனர். கவுன்சலிங்குக்கு மதியம் மொத்தமாக 161 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 93 பேர் பல்கலை.யில் சேர்ந்துள்ளனர்.

பாடப் பிரிவு வாரியாக மாணவர் சேர்க்கை விவரம்: 

              பி.எஸ்.சி வேளாண் அறிவியல் - 82 பேர், 
             வனவியல் - 2 பேர், 
             பி.டெக் வேளாண் பொறியியல் - 5 , 
            உயிரி தொழில்நுட்பம் - 35, 
            தோட்டக் கலை - 2, 
           உணவு பதப்படுத்துதல் பொறியியல் - 15,
           க்தி மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் - 23, 
           உயிரி தகவல் தொழில்நுட்பவியல் - 4, 
          வேளாண் தகவல் தொழில்நுட்பம் - 2.
       
            கவுன்சலிங்கில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், உண்மைச் சான்றிதழ்களை வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கவுன்சலிங்கை துவக்கி வைத்து, பல்கலை. பதிவாளர் சுப்பையன் கூறியது:

                வேளாண் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண் படிப்புகளில் சேர ஏறத்தாழ 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், இந்த ஆண்டு 7,181 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் 493 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சலிங்குக்கு மொத்தம் 1,561 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். வரும் 20-ம் தேதி வரை கவுன்சலிங் நடைபெற உள்ளது. ஜூலை 22-ம் தேதி பல்கலை. திறக்கப்படும், என்றார். பல்கலை.யில் வியாழக்கிழமை காலை நடைபெறும் கவுன்சலிங்குக்கு கட்-ஆப் மதிப்பெண் 185.25 முதல் 182.50 ஆகவும், மதியம் நடக்கும் கவுன்சலிங்குக்கு கட்-ஆப் 182.25 முதல் 179.75 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read more »

நடராஜர் கோயிலில் தரிசனத்தை பகல் 2 மணிக்குள் முடிக்க திட்டம்

சிதம்பரம்:

                பொதுமக்கள் வசதிக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற ஜூன் 19-ம் தேதி நடைபெறவுள்ள ஆனித்திருமஞ்சன தரிசனத்தை 12 மணி முதல் 2 மணிக்குள் முடிப்பது என பொது தீட்சிதர்கள் ஒப்புதலோடு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் அ.ராமராஜூ தலைமை வகித்தார். அறநிலையத் துறை செயல் அலுவலர் க.சிவக்குமார் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது: 

                 தரிசனத்தை பகல் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் முடிப்பது. டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் அசைவக் கடையை மூடக்கோருவது, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைப்பது, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது, தேர் மற்றும் தரிசனம் அன்று போக்குவரத்து மாற்றம் செய்வது, பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை செய்வது.கூட்டத்தில் பொதுதீட்சிர்களின் செயலாளர் ரா.சி.வைத்தியலிங்க தீட்சிதர், தனி வட்டாட்சியர் (கோவில்) கிருஷ்ணமூர்த்தி, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஆர்.கே.நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் அறிவானந்தம், சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், தீயணைப்பு நிலைய அதிகாரி முகமதுசாதிக்அலி, நெடுஞ்சாலைத்துறை சீனுவாசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இந்து ஆலய பாதுகாப்பு குழுத் தலைவர் குஞ்சிதபாதம், பக்தர் பேரவை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

தொழில்நுட்ப உதவியோடு சிறந்த ஆசிரியர்களாக முடியும்

சிதம்பரம்:

               கடந்த காலத்தில் கற்பித்தல் திறனில் சில ஆசிரியர்களே புகழ்பெற்றவர்களாக திகழ முடிந்தது. 21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப உதவியோடு ஒவ்வொரு ஆசிரியரும் சிறந்த மற்றும் புகழ்பெற்ற ஆசிரியர்களாக முடியும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் கல்வியியல் துறை சார்பில் ""கல்வி நுட்பவியல் சாத்தியப்படுத்தும் கற்பித்தல்'' என்னும் தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கருத்தரங்கை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்துப் பேசியது: 

                 தொழில்துறை மற்றும் வியாபாரத்துறை வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. தொலை தொடர்பு மருத்துவம், தொழில்நுட்ப உதவியுடன் சிறப்புடன் செயல்படுகிறது. கற்பித்தல் செயல் முறையில் தொழில்நுட்பத்தை புறக்கணித்துவிட முடியாது. இந்த தகவல் தொடர்பு உலகத்தில் ஆசிரியர்களின் பணி மாறிக்கொண்டே வருகிறது. இணையதளம் மற்றும் மின்னணு வளங்கள் மூலம் தேவையான தகவல்களை பெறுவதற்கு தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு அவசியமாகிறது என எம்.ராமநாதன் தெரிவித்தார். கருத்தரங்குக்கு கல்வியியல் புல முதல்வர் எஸ்.மங்கையர்கரசி தலைமை வகித்தார். கல்வியியல் துறைத் தலைவர் கே.விஸ்வநாதன் வரவேற்ரார். இணைப் பேராசிரியர் ஆர்.ஞானதேவன் நன்றி கூறினார். கருத்தரங்கு அமைப்புச் செயலர் முனைவர் ஆர்.பாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Read more »

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்

கடலூர்:
 
                      தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, மேலும் 200 வேன்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பனனீர்செல்வம் தெரிவித்தார். 
 
 கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் கிராமத்தில் புதன்கிழமை பகுதிநேர ரேஷன் கடையைத் திறந்து வைத்து அமைச்சர் பேசியது:
 
                       ஒரு மாதத்துக்கு முன் மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இங்கு ரேஷன் கடை திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1,17,057 பேருக்கு ரூ.326 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 700 பேருக்கு ரூ.2.5 கோடி செலவு செய்யப்படுகிறது.  ஏழை மக்களின் உயிர் காக்கும் சேவையைச் செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், தற்போது 385 வாகனங்கள் உள்ளன. தொலைபேசி அழைப்பு வந்த 15 நிமிடத்தில் இவைகள் நோயாளியைச் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்க்கின்றன. இதை 5 நிமிடத்திலேயே கொண்டு வந்து சேர்க்கும் வகையில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, மேலும் 200 வாகனங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது என்றார் அமைச்சர்.விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி, ஊராட்சி மன்றத் தலைவர் ரவிசங்கர், கல்விக்குழுத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடலூர் தனியார் மருத்துவமனையில் திட்டக்குடியைச் சேர்ந்த வீரமுத்து (72) என்பவருக்கு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை, அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

Read more »

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

பண்ருட்டி:
 
                பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபார சங்கங்களின் சம்மெüனம் மற்றும் அனைத்து பள்ளிகளும் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 
 
                பண்ருட்டி நகரப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பான தீர்மானம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நகர மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் படி ஜூன் 16-ம் தேதி முதல் நகரப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை (மறுசுழற்சிக்கு உதவாதவை) விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை பிரம்மாண்டமான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நகராட்சியை வந்தடைந்தது. பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 
                 நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கி.கோதண்டபாணி முன்னிலை வகித்தார். பேரணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேரணியைத் தொடங்கி வைத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரிடம், திருவதிகையில் மண்ணெண்ணெய் பங்க் அமைக்க அமைச்சர் தெரிவித்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது,  நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்யப்படவில்லை. ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்ததுடன் சரி; மேற்கொண்டு நடவடிக்கை இல்லை, விழமங்கலத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்சேய் நல விடுதியில் பணியாளர் இல்லை, பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு தொந்தரவு, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்காமையால் விபத்தால் உயிரிழப்பு, கெடில நதியில் குப்பை கொட்டுதல் சுற்றுச்சூழல் பாதிப்பு, செயல்படாத உழவர் சந்தை, கடலூர்-சித்தூர் சாலையில் பைபாஸ் வசதி, கள்ளச்சாராய விற்பனை, மணல் கடத்தல், பண்ருட்டியில் ஷேர் ஆட்டோ இயக்க வேண்டுதல் உள்ளிட்ட குறைகளை எம்எல்ஏ தி.வேல்முருகனும், செய்தியாளர்களும் சுட்டிக்காட்டினார்.இதற்கு பதில் அளித்த ஆட்சியர், உழவர் சந்தை குறித்த பிரச்னைக்கு நகராட்சியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும்படி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வத்திடம் கூறினார். 
 
                குப்பை கொட்ட இடம் தேர்வு செய்துள்ளனர். இடத்தை வாங்க மாவட்ட வருவாய் அலுவலர் விலை நிர்ணயித்துள்ளார். திருவதிகையில் மண்ணெண்ணெய் பங்க் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்வதால் மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி கூறியதற்கு நகராட்சி பூங்காவுக்கு ஓதுக்கப்பட்ட பகுதியில் இடம் ஒதுக்க ஆவண செய்யும்படியும், தொகுப்பு ஊதியத்தில் தாய்சேய் நல விடுதியில் பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் பெ.சீதாராமன் கூறினார். தொடர்ந்து பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார் ..இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மங்கலம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) வி.வடிவேலு, திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆர்.சேரன், வியாபாரிகள் சங்க பொது செயலர் சி.ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

NLC conducts computer skills programme for wards of project-affected persons

CUDDALORE: 

            The Neyveli Lignite Corporation has imparted training in basic computer skills to the wards of project-affected persons. Being conducted as part of an entrepreneurial development programme, as many as 34 women have benefited from the training, according to P. Babu Rao, director (personnel), NLC.

             He was speaking at a function organised on the NLC campus at Neyveli here to distribute certificates to those who had completed the 19-day training programme. Mr. Rao said that the candidates were selected by the Training and Development Unit and the Land Acquisition Department of the NLC for the programme. They were wards of persons who were displaced from the villages of Melpapanapattu, Periyakurichi, Neyveli, Uyyakondaravi, Keelpaathy, Uthangal, Kottagam, Managathy and Parvathipuram. Mr. Rao said that as part of the corporate social responsibility policy adopted by the NLC, entrepreneurial development programme was being organised for the project-affected persons on the training complex.

               Many persons were trained in carpentry, tailoring, domestic electrical wiring, heavy vehicle driving, etc., and resource persons were drawn from the Gandhigram University. Mr. Rao called upon the Land Acquisition Department to provide computers at community centres of the villages to help the candidates update their skills. Deputy General Manager of Training and Development Unit (NLC) N. Balaji said it was for the first time that the NLC had decided to pay a cash incentive of Rs. 1,500 to each of the candidates. Such incentive would be given to all the candidates undergoing training in future programmes, he said. Chief General Managers C. Senthamilselvan and A. Lourdes, General Manager N.P. Veerasigamani were present.

Read more »

200 more vehicles to be added to ‘108' ambulance services fleet in Tamil Nadu

CUDDALORE:

             Health Minister M.R.K. Panneerselvam has said that 200 more vehicles would soon be added to the existing fleet of ‘108' ambulance services in Tamil Nadu, for which Chief Minister M. Karunanidhi has given his consent.

              The Minister was speaking at a function held at Poondiyankuppam near here on Wednesday, where he inaugurated a part-time fair price shop. At present, the ambulances could reach a spot within 15 minutes of getting a phone call, but after the increase in the number of vehicles, the service would be made available within five minutes, he said. Mr. Panneerselvam said that so far 1,17,057 people underwent surgeries at a cost of Rs.326 crore under the Kalaignar Health Scheme. It meant that on an average 200 persons were getting life-saving treatment at a cost of Rs. 2.5 crore every day.

                He said that when he visited Poondiyankuppam last month, residents made a representation seeking a part-time fair price shop and their demand was now conceded. On the occasion, the Minister gave away financial assistance of Rs.1.93 lakh to 16 Adi Dravidars for buying milch animals. District Revenue Officer S. Natarajan said that so far 4,15,147 free colour television sets and 69,442 free cooking gas connections were given in the district. During this year, 44,000 more free gas connections would be given, he added.
Joint Registrar of Cooperative Societies Venkatesan, Special Officer of Central Cooperative Bank Mrinalini, panchayat president Ravisankar and others participated.

Read more »

மாயமான அரசு பள்ளி ஆசிரியர் உடல் கண்டெடுப்பு

உளுந்தூர்பேட்டை : 

                உளுந்தூர்பேட்டை அருகே, காணாமல்போன அரசு பள்ளி ஆசிரியரின் உடல் 13 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்தவர் வெங்கடேசன்(45). விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த, பாதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை கடந்த 4 ஆண்டுகளாக சென்னை புளியந்தோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி பள்ளிக்கு செல்வதாக சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை. பண்ருட்டி போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று காலை 10 மணியளவில், பாதூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமசாமி என்பவரது மரவள்ளி வயலில் துர்நாற்றம் வீசியது. காவலாளி கணேசன் பார்த்தபோது, அழுகிய நிலையில் எலும்புகூடாக ஆண் உடல் கிடந்தது. தகவலறிந்த வி.ஏ.ஓ., ஜெயக்குமார் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். காணாமல்போன ஆசிரியர் வெங்கடேசனின் உறவினர் முகிலன் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்தது ஆசிரியர் வெங்கடேசன் என உறுதி செய்தார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரியர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என, விசாரித்து வருகின்றனர்

Read more »

பகலில் எரியும் தெரு விளக்குகளால் மின்சாரம் விரயமாகிறது : உள்ளாட்சி பிரதிநிதிகள்கவனிப்பார்களா?

கடலூர்: 

                   மின்சாரப் பற்றாக்குறை காரணமாக கட்டாய மின் வெட்டு அமல்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் உள்ளாட்சி நிர்வாகிகளின் அலட்சியத்தால் பட்டப் பகலில் தெரு விளக்குகளை எரியவிட்டு மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.

                    நீரின்றி அமையாது உலகு என் பது போல் இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரம் தற் போதைய மக்கள் தொகை பெருக் கத்தினால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இவை தவிர பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒரு நாள் 9 மணி நேரம் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும், மின் வாரியம் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. அதில் அதிக மின்சாரம் உபயோகமாகும் மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிக வீடுகளில் போடப் பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதே நேரத்தில் வெப்பத்தை வெளியிடாத "சி.எப்.எல்.,' பல்புகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

                    தற்போது நிலவி வரும் மின் வெட்டை தவிர்த்திட ஒவ்வொருவரும் கட்டாயமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் தமிழக அரசின் ஓர் அங்கமான உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பற்ற செயலால் மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 682 கிராம ஊராட்சிகள், 13 ஓன்றியங்கள், 16 பேரூராட்சிகள், ஐந்து நகராட்சிகள் உள்ளன. இதன் மூலமே குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகளே தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவரவர் பகுதிகளில் "ஹைமாஸ்' விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்குகளை அதிக அளவில் அமைத்து வருகின்றனர்.

                     இரவில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக உள்ள பகுதிகளில் கூட அதிக மின்சாரம் செலவாகும் சோடியம் மற்றும் மெர்க்குரி விளக்குகளை அமைத்துள்ளனர். டியூப் லைட் இருந்தாலே போதும் என்ற பகுதிகளில் கூட "ஹைமாஸ்' விளக்குகளை அமைத்துள்ளனர் மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை. இந்த தெரு விளக்குகளை தினசரி மாலை நேரத்தில் எரிய வைக்கவும், மறுநாள் காலை 6 மணிக்கு நிறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர் தனது பணியை சரியாக செய்வதில்லை. அவர் நினைத்தால் தெரு விளக்கு எரியும். இல்லை என்றால் சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கும் என்ற நிலைதான் உள்ளது.

                           இதன் காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகளில் பகல் நேரங்களில் வீணாக தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும், மற்றொரு பகுதிகளில் இரவில் தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகளும் தெரு விளக்குகள் அமைப்பதோடு தங்களது வேலை முடிந்து விட்டது என ஒதுங்கிக் கொள்கின்றனர். அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளும் தினசரி காலை நேரத்தில் தங்கள் பகுதிகளில் வலம் வந்தாலே பகலில் தெருவிளக்குகள் எரிவதை தவிர்க்கலாம். இதன் மூலம் விலை மதிப்பற்ற மின்சாரத்தை சேமிக்க முடியும். இதனை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உணர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதிக்கு காத்திருக்கும் பாதாள சாக்கடை பணி

கடலூர்: 

                    கடலூர் நகர பாதாள சாக்கடைத் திட்டத்தில் முதுநகர் சாலையில் பணிகள் துவங்க தேசிய நெடுஞ்சாலை அனுமதி வழங்காததால் காலதாமதமாகி வருகிறது. கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்ட பணி 40 கோடி மதிப்பில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முடிக்கப்படவில்லை. நகரப் பகுதியில் தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நகரமெங்கும் சகதியாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரி தமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை பணிக்காக டெண்டர் விட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட் டதால் தற்போது கட்டுமானப் பொருட் கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே ஏற்கனவே டெண்டர் எடுத் தவர்கள் திட்டத்தை முடிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் திட்டப்பணி தொடர்ந்து தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. பள்ளம் தோண்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அனுமதி கேட்டு குடிநீர் வடிகால் வாரியம் காத்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகம் டில்லியில் இருப்பதால் அனுமதி கிடைப்பதில் தாமதமாகிறது. மழைக்காலம் வருவதற்குள் பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் ஓரளவாவது முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Read more »

விழமங்கலம் நகராட்சி பெண்கள் பள்ளிக்கான இடம்: கலெக்டர் நேரில் ஆய்வு

பண்ருட்டி: 

                      விழமங்கலம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கான இடத்தை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டி விழமங்கலம் நகராட்சி துவக்கப் பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்த கலெக்டர் சீத்தாராமன் பள்ளிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டார். மேலும் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். மேலும் நகரில் உள்ள குடிநீர் பைப் லைன்களை மாற்ற குடிநீர் வடிகால் வாரியத்துறை மூலம் பேசி நடவடிக்கை எடுக்கவும், மண்ணெண் ணெய் பங்க், நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யவும் கமிஷனர் உமா மகேஸ்வரிக்கு உத்திரவிட்டார். ஆய்வின் போது எம்.எல்.ஏ., வேல்முருகன், கமிஷனர் உமா மகேஸ்வரி, தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

கிள்ளை அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மரியாதை

சிதம்பரம்: 

                  கிள்ளை அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளிலேயே குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஜனாதிபதி வரை அனைத்து உயர் பதவிகளையும் வகித்துள்ளனர் என்பதை உதாரணத்துடன் சுட்டிக்காட்டியதையடுத்து கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். முதல் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் தாங்கள் விரும்பும் பதவிக்கு படிப்போம் என உறுதிமொழி எடுத்து தலையில் கிரீடம் வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். ஊர்வலத்தை கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்ரமணியன், தலைமை ஆசிரியர் கவுரி, உதவி ஆசிரியர்கள் பர்வின் பானு, பவானி, ஆசிரியர் பயிற்றுனர் மாறன், கவுன்சிலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

Read more »

பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்

கடலூர்: 

                     கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                    கடலூர் பெரியார் கலைக் கல்லுரியில் 2010-2011ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு இன்றும், நாளை 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21 மற்றும் 22ம் தேதி நடக்கிறது. 

                  இன்று காலை துவங்கும் முதல் கட்ட கலந்தாய்வில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கும், நாளை 18ம் தேதி பி.காம்.,- பி.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இயக்கியம், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் நடக்கிறது. பிளஸ் 2 பொது பாடப்பிரிவில் பகுதி மூன்றில் 800க்கு 500 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றவர்களும், தமிழ், ஆங்கில இலக்கியம் பாடப் பிரிவிற்கு மொழிப் பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இக்கலந் தாய்வில் பங்கேற்கலாம். இதற்கான அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட பாடத்திற்கு விண்ணபித்து கடிதம் கிடைக்காதவர்கள் கலந் தாய்வு நடக்கும் நாட்களில் காலை 9 மணிக்கு கல்லூரி முதல்வரை சந்திக்க வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், டி.சி., ஜாதி மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ், சேர்க்கைக்கான கட்டணம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். 

                     இரண்டாம் கட்ட கலந் தாய்வு 21ம் தேதி பி.எஸ். சி., பாட பிரிவிற் கும், 22ம் தேதி பி.காம்.,- பி.ஏ., பாட பரிவிற்கு நடக்கிறது. இதற்கு பொது பிரிவு பகுதி மூன்றில் 800க்கு 500க்கு மதிப் பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு மொழி பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

எல்லோரும் உழைத்தால்தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் : அமைச்சர் பன்னீர்செல்வம்பேச்சு

குறிஞ்சிப்பாடி: 

                   அரசின் நலத்திட்டங்கள் உள்ளது என இருமாப்புடன் இருந்து விடாமல் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் மீண் டும் ஆட்சியை பிடிக்க முடியும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

                       கடலூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கணேசன் முன் னிலை வகித்தார். பொருளாளர் பாஸ்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், ஜெயராமன், ராசவன்னியன், பூவராகசாமி எம். எல்.ஏ., அய்யப்பன், ஒன் றிய செயலாளர்கள் முத்துசாமி, சிவக்குமார், ஞானமுத்து, வெங்கட்ராமன், ராமு, ஜெயராமன், பண்ருட்டி சேர்மன் பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கோவையில் உலகத்தமிழ் செம் மொழி மாநாட்டினை நடத்தும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பது. அவரது 87வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலத் திட் டங்களை எடுத்துச் செல் லும் வகையில் தெருமுனை பிரசாரம் நடத்துவது. உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டுக்கு பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது உட் பட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: 

                     தேர்தல் வரும் இந்த நேரத்தில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது, அ.தி.மு.க., எதற்கெடுத்தாலும் போராட்டங் களை நடத்தி வருகிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்க்கு முதல்வர் கருணாநிதி தொண்டர்களை அழைத்துள்ளார். அதனை செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். யாராக இருந்தாலும் உழைக்கிறவர்களுக்கு கட்சியில் பதவி கிடைக்கும். அரசின் நலத்திட்டங்கள் உள்ளது என இருமாப்புடன் இருந்து விடாமல் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். கட்சியில் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்றி முதல்வர் கருணாநிதியின் கரத்தையும், கட்சியையும் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

Read more »

பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மனித உரிமை கழகம் அரசுக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை: 

                    பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனித உரிமை கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர மனித உரிமைகள் கழக கூட்டம் நடந்தது. நகர அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல் வராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                      கூட்டத்தில் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள டாஸ் மாக் கடையால் பொதுமக்கள், பஸ்பயணிகள் பாதிக்கப்பட்டு வருவதால் அரசு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், சின்னக்கடையில் 50 ஆண்டுகளாக இருந்து வந்த துணை அஞ்சல் அலுவலகத்தை முன் அறிவிப்பு இல்லாமல் காலிசெய்ததை கண்டித்தும். பரங்கிப்பேட்டை வழிதடம் வாங்கிக்கொண்டு பரங்கிப்பேட்டைக்கு வராமல் கொத்தட்டை வழியாக செல்லும் தனியார் பஸ்கள் மீது மோட்டார் வாகன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மனித உரிமை கழக நிர்வாகிகள் குமார், முத்துக்குமரன், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்

விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம் நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து வந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைவதால் அரசு அந்தந்த பள்ளிகளிலே பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல். சி., தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவும் பள்ளியில் நடக்கிறது. தலைமை ஆசிரியர் முருகேசன் பதிவினை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் வீரராகவன் தலைமையில் ஆசிரியர்கள் ராஜன், கிருஷ் ணகுமாரி, ஹேமலதா, விஜயலட்சுமி, மணிக்கொடி, உஷாகுமாரி, எழில்ராணி ஆகியோர் மாணவர்களின் சான்றிதழ் களை சரிபார்த்து பதிவு செய்தனர்.

Read more »

மனைப்பிரிவு அனுமதி நகர ஊரமைப்பில் முதலில் பெற வேண்டும்: கலெக்டர்

கடலூர்: 

                     ஊராட்சிகள் கட்டட விதிகள் படி நகர ஊரமைப்புத் துறையில் மனைப் பிரிவுக்கு தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டபின் கிராம ஊராட்சியில் அனுமதி பெற வேண்டும்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                     கூட்டு உள்ளூர் திட்டப் பணி மற்றும் புறநகர் வளர்ச்சி திட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 5 ஏக் கர் பரப்பு வரை மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க சம்மந்தப்பட்ட உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து ஊராட்சி பகுதிகளில் 5 ஏக் கர் பரப்பு வரை சம்பந்தப்பட்ட மண்டல இயக்குனருக்கு மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப அனுமதி மற்றும் ஊராட்சி அனுமதி இன்றி அமைக் கப்படும் மனைப்பிரிவுகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட மாட்டாது. அனுமதியின்றி அமைக்கும் மனைப் பிரிவுகளில் அடிப்படை வசதிகள் ஊராட்சியின் மூலம் செய்து தர இயலாது. மேலும் ஊராட்சிகளில் கட்டப்படும் அரசு கட்டடம் தவிர மற்ற எந்த பொது கட்டடங்களையும், அடுக்குமாடி கட்டடங்களையும் கட்டட நகர் ஊரமைப்பு திட்டத்தின் இணை இயக்குனர் அல்லது துணை இயக்குனரிடம் தொழில்நுட்ப ஆலோசனை பெற்று பின்பு ஊராட்சியில் அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் பாலக்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் பாலக்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நெய்வேலி மனித நேய மேம்பாட்டு மையம், பவர் சிட்டி அரிமா சங்கம், மோட்டார் வாகன ஆய் வாளர் அலுவலகம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மனித நேய மேம்பாட்டு தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் ராஜவேல்முருகன் வரவேற்றார். கணேசன், சிதம்பரம், வக்கீல் கீதா ஆகியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ரத்த தானம் வழங்கிய 50 பேருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது. தன்ராஜ், பாஸ் கர், கருணா, செந்தில், அன்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பராமரிப்பின்றி தடுப்பணை நீர் தேக்க முடியாத அவலம்

நெல்லிக்குப்பம்: 

                   வானமாதேவி கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ஷட்டர்கள் பழுதாகி பராமரிப்பின்றி உள்ளதால் தண்ணீர் தேக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் வானமாதேவியில் கெடிலம் ஆற் றின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் தண்ணீர் தேங்கியதால் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் தடுப்பணையை பொதுப்பணித் துறையினர் பராமரிப்பதை மறந்தனர். தற்போதைய தடுப்பணைகள் போல் இல்லாமல் வானமாதேவி தடுப்பணை கருங்கல்லால் முறையாக கட்டப்பட்டதால் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நன்றாக உள்ளது. பராமரிப்பு இல்லாததால் இரும்பு ஷட்டர்கள் பாழாயின. ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் ஷட்டர்கள் இல்லாததால் தேங்கி நிற்காமல் கடலில் கலந்து வீணாகிறது. தடுப்பணை அருகே தண்ணீர் தேங்க வழியில்லாமல் மணல் மேடானது. வானமாதேவி, திருவந்திபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தடுப்பணைகளை அதிகாரிகள் முறையாக பராமரித்தால் நிலத்தடி நீர் உயரும்.

Read more »

போக்குவரத்து மாற்றத்தால் அவதி! பொதுமக்கள் மறியல் செய்ய முடிவு

கடலூர்: 

                       கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

                          கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 7ம் தேதி முதல் சாலை தடை செய்யப்பட்டதோடு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட் டது. அதன்படி கடலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலை வழியாக சென்று ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி சாலையை அடைகிறது. அதே போல் விருத்தாசலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அதே வழியாக சிதம்பரம் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் டவுன் பஸ்கள் மட்டுமே காரைக்காடு வழியாக இயக்கப்படுகிறது.

                    இந்நிலையில் காரைக்காடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அதிகளவில் தங்கள் பகுதியில் வாகனங்கள் செல்வதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கனரக வாகனங்கள் குள்ளஞ்சாவடி வழியாக திருப்பி விடப்பட்டது. போதிய பஸ் வசதி இல்லாததால் குள்ளஞ்சாவடியில் இருந்து முதுநகர் வரையுள்ள தொண்டமாநத்தம், சுப்ரமணியபுரம், சேடப்பாளையம், அன்னவல்லி, கண்ணாரப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கிராம பொதுமக்களும் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து சேடப்பாளையம், சுப்ரமணியபுரம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Read more »

அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் வீட்டின் அருகே வழிந்தோடும் குடிநீர்

நெல்லிக்குப்பம்: 

                  ஒன்றிய சேர்மன் வீட்டின் அருகிலேயே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. அண்ணாகிராமம் ஒன்றியம் சித்தரசூர் ஊராட்சி காலனியில் ராஜிவ்காந்தி குடிநீர் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் கவுரி வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே சின்டெக்ஸ் டேங்க் வைக்க இடமில்லாததால் எதிர்புறத்தில் டேங்க் வைத்தனர். சாலையின் குறுக்கே சென்ற பைப் வாகனங்கள் சென்றதால் ஆறு மாதங்களுக்கு முன் உடைந்தது. அப் போது முதல் டேங்க்கில் தண்ணீர் ஏற்றப்படாமல் மோட்டார் அருகிலேயே தண்ணீர் பாழாகி வழிந்தோடுகிறது. அதனால் அப்பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கிராமசபை கூட்டங்களில் இதுபற்றி புகார் தெரிவிக்கையில், உடனடியாக சீர் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியும் பயனில்லை.

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மின்னல் தாக்கியதில் கம்ப்யூட்டர் பழுது

நெல்லிக்குப்பம்: 

                  நெல்லிக்குப்பம் நகராட்சியில் மின்னல் தாக்கியதில் கம்ப்யூட்டர்கள் செயல் இழந்ததால் வரிவசூல் பணிகள் பாதித்தது. நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் மாலை மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது. நகராட்சியில் மின்னல் தாக்கியதில் மின்சார ஒயர்கள் எரிந்து சேதமடைந்ததால் கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன. இதனல் நேற்று மதியம் வரை வரி வசூல் செய்யும் பணிகள் பாதித்தது. ஒரு மணிக்குப் பின் பழுது நீக்கியவுடன் வசூல் பணி துவங்கியது.

Read more »

வடலூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

குறிஞ்சிப்பாடி: 

                           வடலூரில் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர். வடலூரில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடலூர் - நெய்வேலி சாலையில் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டு விற்ற கடலூரைச் சேர்ந்த வடிவேலு (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Read more »

புவனகிரி அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் மயக்கம்

புவனகிரி: 

                  புவனகிரி அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் மயக்கமடைந்தனர். புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 250 மாணவ, மாணவிகள் நேற்று மதிய உணவு சாப்பிட்டனர். இதில் மாணவிகள் அனுசுயா (12), அன்புக் ரசி (12), மாணவர்கள் பிரசன்னா (11), நிஷாந்த் (9), சுபாஷ் (10) ஆகியோர் வாந்தி எடுத்து மயங்கினர். உடன் புவனகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்களுடன் சாப்பிட்ட 28 மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாசில்தார் காமராஜ், பி.டி.ஓ., வாசுகி, சேர்மன் தனலட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கட்ட இடம்: டி.ஆர்.ஓ., நடராஜன் பார்வை

ஸ்ரீமுஷ்ணம்: 

                     ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்ய உள்ள இடங்களை டி.ஆர்.ஓ., பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் சமத்துவபுரம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த இடம் சமத்துவபுரம் கட்ட போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் மண்ணின் தன்மை மற்றும் வளம் குறித்து டி.ஆர்.ஓ., நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் தனசங்கு, ஆர்.ஐ., சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் வெங்கடாசலம், மயில்வாகணன், ஷாஜகான், தேத்தாம் பட்டு ஊராட்சி தலைவர் காந்தி செல்வராஜன் உடன் இருந்தனர். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு பணிகளை உடனே துவங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Read more »

பால் உற்பத்தியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

                        கால்நடை மருத்துவமனைகளை முறையாக செயல்படுத்தி சிகிச்சை அளிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுப்பாளையம் கால் நடை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலாளர் சுப்புராயன், மாநிலக்குழு பழனி, ஒன்றிய தலைவர் குமார், மாவட்டக்குழு சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கால் நடை இணை இயக்குனர், டாக்டர்கள், ஊழியர்கள் அலட்சியத்தால் முறையான சிகிச்சை இல்லாமல் இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூர் பகுதியில் உள்ள அனைத்து கால் நடை மருத்துவமனைகளை முறையாக செயல்படுத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் உட்பட பல கோரிக்\கைகள் வலியுறுத்தப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior