உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம்: கருணாநிதி


     
              இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என முதல்வர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 
           இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான் சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள்  முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 
 
பின்னர்  பேசிய அவர்கள், 
 
           இலங்கையில் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்துப்படுவதில் உள்ள சிக்கல் பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தனர். இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டைப் பொருத்தே மற்ற நாடுகளின் நடவடிக்கைகள் அமையும் என்பதால் கடந்த சில நாள்களாக இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம் என முதல்வர் உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பி.க்கள் கூறினர். இலங்கைத் தமிழர் நிலைபற்றி தமக்குத் தகவல் வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் கூடுதல் தகவல்களைக் கூறினால், அவற்றை சோனியாவின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என முதல்வர் கூறியதாகவும் எம்.பி.க்கள் குழுவினர் தெரிவித்தனர்.

Read more »

ஆங்கில ஆசிரியர் தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு

               ஆங்கில பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது. 

            தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 6,300 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அண்மையில் முடிந்தன. அதைத்தொடர்ந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு முதல் கட்டமாக ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கடுத்து வரலாறு, தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியல்கள் படிப்படியாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆங்கில பாட ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தெரிகிறது.

Read more »

அரசுத் தேர்வுகள் துறையில் தேங்கி கிடக்கும் 15 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள்


            போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் ஒட்டுமொத்தக் கல்வித்துறையைப் புரட்டி போட்டுள்ளது. அது ஒரு புறமிக்க, மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அரசு தேர்வுகள் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்ட 15 லட்சம் சான்றிதழ்கள், அப்படியே தேங்கி கிடக்கின்றன என்று கூறப்படுகிறது.

              போதிய பணியாளர்கள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் விண்ணப்பங்கள் தேங்கி கொண்டே போகின்றன என்று தெரியவந்துள்ளது.சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் துறை மூலம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கையைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் சார்பில் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அரசு தேர்வுகள் துறைக்கு விண்ணப்பம் செய்கின்றன.மத்திய-மாநில அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், ராணுவம், ஆசிரியர் பணியிடம், கருணை அடிப்படையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், பொறியியல், மருத்துவம் மற்றும் வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன.

               அரசு தேர்வுகள் துறைக்கு மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பெண் சான்றிதழ்கள், உண்மைத்தன்மை அறிவதற்கு வருகின்றன.ஆனால், இப்படி லட்சக்கணக்கில் வரும் மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்க வெறும் 20 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியை கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்பட அதிகாரிகள் அளவில் ஒருவர் மட்டுமே உள்ளார். மூன்று அதிகாரிகள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு அதிகாரியே பணிபுரிந்து வருகிறார் என்று அரசு தேர்வுகள் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்துடன் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்தல், தேர்வு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற இதர பணிகளை செய்வதால், மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது.

              சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் துறை தலைமை அலுவலகத்தில் மட்டும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் உள்பட 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை செய்வதில் தொய்வு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேக்கம் ஏற்படுகிறது.  5 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள்கூட இன்னும் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. இப்படி லட்சக்கணக்கில் சான்றிதழ்கள் தேக்கமடைந்துவிடுகின்றன. தேக்க நிலையை சரிசெய்ய வேண்டுமெனில் போதிய பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற நிலைமை தவிர்க்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

            இதுபோல கடந்த சில ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் மதிப்பெண் சான்றிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சம் என கணக்கிடப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகள், சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து அரசு தேர்வுகள் துறையிடம் இருந்து எவ்வித பதிலும் வராதது கண்டு, இப்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிப்பதே இல்லை என்று கூறப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து அவை போலியானதா? உண்மையானதா? என கண்டறிந்து சொல்ல வேண்டிய அரசு தேர்வுகள் துறையில் நிலவும் ஆள்பற்றாக்குறை பற்றி அரசு கண்டும் காணாமல் இருப்பதுதான் இப்பிரச்னைக்கு மூல காரணம் என தெரியவந்துள்ளது. கல்வி வியாபாரமாகிவிட்ட நிலையில், போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை என தெரியவில்லை.

                   போதிய நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்த்து உண்மைத்தன்மையை தெரிவிக்க முடியாமல் போவதால், தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து படித்து பட்டம் பெற்று செல்லும் மாணவர்களை எப்படி அரசால் கண்டறிய முடியும் என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது.

Read more »

ரேஷன் கார்டுக்கு அலையும் கடலூர் மக்கள்


கடலூர் எல்காட் அலுவலக தாழ்வாரத்தில் மலைபோல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுகளுக்கான இறுதி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள்.
 
கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுக்காக மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது.
 
             சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட கடலூர் மாவட்டத்தில் 7.5 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தன. போலி கார்டுகளைக் கண்டறிகிறோம் என்று உணவு வழங்கல் துறை மேற்கொண்ட நடவடிக்கையால், 1.17 லட்சம் ரேஷன் கார்டுகள் போலியானவை என்று அதிகாரிகள் முத்திரையிட்டனர். அலுவலர்கள் முறையாகக் களஆய்வு மேற்கொள்ளாததால், உண்மையான பலரது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் எழுந்தன. 
 
             போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்யப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்த உடனேயே, போலியான ரேஷன் கார்டு வைத்திருப்போர் உஷாராகி விட்டனர். உடனடியாகச் செயல்பட்டு தங்களது ரேஷன் கார்டுகளைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் கள ஆய்வுக்கு அலுவலர்கள் வந்தபோது வீட்டில் இல்லாதவர்கள், கள ஆய்வை முறையாகச் செய்யாதோரிடம் சிக்கிக் கொண்டோர், கிராமங்களில் உள்ள அப்பாவி ஏழை மக்கள் பலரும் இதில் பாதிக்கப்பட்டனர்.அவ்வாறு பாதிக்கப்பட்டோர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டது. 
 
              எனினும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே மீண்டும் ரேஷன் கார்டு கிடைத்தது. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்போர், நகர்ப் புறங்களில் நாள்தோறும் அலுவலக வேலை என்று, தங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் போனோர் பலர், அலைந்து திரிந்தும் ரேஷன் கார்டுகளைப் பெற முடியவில்லை. புதிதாக விண்ணப்பித்த பலருக்கும் பல்வேறு காரணங்களைக் கூறி ரேஷன் கார்டு மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்காமல் உள்ளது. அந்த வகையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டுக்காக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். வழங்கல் துறை அலுவலர்கள் உரிய ஆய்வுகள் அனைத்தும் முடித்து, எல்காட் நிறுவனத்துக்கு அனுப்பினால் அங்கு கார்டு அச்சிடுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 
 
             அங்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் அச்சிடாமல் தேங்கிக் கிடப்பதாகவும் அவற்றைப் பாதுகாக்க இடமின்றி தாழ்வாரங்களில் முடங்கிக் கிடப்பதாவும் கூறப்படுகிறது. இப்போதெல்லாம் ரேஷன் கார்டு என்பது தேசிய அடையாள அட்டைக்குச் சமமாக மதிக்கப்படுகிறது. ரேஷன் கார்டு இருந்தால்தான் அரசின் எந்தச் சலுகைக்கும் விண்ணப்பிக்க முடியும். மாதம் 20 கிலோ ரேஷன் அரிசியை பெறுவதற்கும், இதர ரேஷன் பொருள்களை வாங்குவதற்கும், ஆண்டுக்கு இருமுறை இரு இலவச வேட்டி- சேலை, இலவச கலர் டி.வி. பெறுவதற்கும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு இல்லாவிட்டால் முடியாது.
 
டலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் இதுபற்றிக் கூறுகையில், 
 
              போலி ரேஷன் கார்டு என்று விசாரணை ஏதுமின்றி, ஆயிரக்கணக்கானோரின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. உரிய காலத்தில் புதுப்பிக்க முடியாமல் போன பலரையும், புதிதாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியாயமான ரேஷன் கார்டுக்காக காத்து இருக்கிறார்கள்.தாலுகா மட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் இருந்த ரேஷன் கார்டு வழங்கும் அதிகாரம், தற்போது  மாவட்ட வழங்கல் அலுவலருக்கு மாற்றப்பட்டு இருப்பது  மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
               மேலும் ரேஷன் கார்டு வழங்குவதை  தாற்காலிகமாக வாய்மொழி உத்தரவின் மூலம் நிறுத்திவைத்து இருப்பதாகவும் வட்ட வழங்கல் அலுவலர்கள், விண்ணப்பதாரர்களிடம் தெரிவிக்கிறார்கள் என்றார்.மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, தற்போது கடலூர் மாவட்டத்தில் 6,54,951 ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிய ரேஷன் கார்டுக்காக, அனைத்து ஆவணங்களுடனும் விண்ணப்பித்தால், நியாயமானதாக இருந்தால் கள ஆய்வு செய்து, 60 நாள்களில் ரேஷன் கார்டு வழங்குகிறோம். கடலூரில் உள்ள எல்காட் அலுவலகத்தில் ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது. ரேஷன் கார்டு கோரி தற்போது எவ்வளவு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று தெரியவில்லை. ரேஷன் கார்டு வழங்க தாற்காலிகத் தடை ஏதும் இல்லை. உடனுக்குடன் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
 
இதுகுறித்து எல்காட் அலுவலக கடலூர் மேலாளர் கூறுகையில்
 
                 ரேஷன் கார்டு அச்சிடுவது குறித்து பொதுமக்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை போலும்!

Read more »

சுற்றுச் சுவர்கள் இல்லாததால் பள்ளிகளை "சுற்றும்' பிரச்னைகள்


சிதம்பரம்:
 
             கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
 
             கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்தும், சுற்றுச் சுவர்கள் இல்லாமல் உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கீரப்பாளையம், கவரப்பட்டு, வல்லத்துறை, டி.நெடுஞ்சேரி, பரிவிளாகம், குருங்குடி, கருப்பேரி, கண்டமங்கலம், தாண்டவராயன்சோழகன்பேட்டை உள்ளிட்ட பள்ளிகளில் சுற்றுச் சுவர்கள் இல்லை. 
 
            காலையில் பள்ளிக்கு வரும் அப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் வருவதற்கு முன் அங்கு கிடக்கும் மது பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் அவலநிலை பல பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது.பல்வேறு கிராமங்களில் பள்ளிகள், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ளதால் பள்ளி வளாகத்தைச் சுற்றி முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் ஆடு, மாடுகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து விடுவதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பயிலும் நிலை உள்ளது.குறிப்பாக, சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் அப்பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
 
             மேலும் இப் பள்ளியின் எதிர்ப்புறம் குளம் உள்ளது. சுற்றுச் சுவர் இல்லாததால் மாணவ, மாணவியர்கள் குளத்தில் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சம் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது.அதேபோன்று காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துமிடமாக மாறி விடுகிறது அப்பள்ளி. அப்பள்ளியைச் சுற்றி முட்புதர்கள் உள்ளதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது.எனவே கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் தகுதி குறித்து கணக்கீடு செய்து புதிய வகுப்பறைகள் கட்டும்போது சுற்றுச் சுவரும் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

Read more »

ஹட்சன் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. ஒப்பந்தம்

சிதம்பரம்:

          பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனமான ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் தங்களது கள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புல கால்நடை பராமரிப்புப் பிரிவுடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் கையெழுத்திட்டது.

            ஹட்சன் அக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் பால் சேகரிப்பு மற்றும் கறவை மாடுகளுக்கான தொழில்நுட்ப சேவைகளை அளித்து வருகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்தகைய களப்பணியாளர்களுக்கு விஞ்ஞான ரீதியிலான பால் உற்பத்தி வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப பயிற்சியை ஒருவார காலத்துக்கு தமிழில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அண்ணாமலைப் பல்கலை. கால்நடை பராமரிப்பு பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு பிரிவுக்கு இருபது களப்பணியாளர்கள் வீதம் 9 பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

              இந்த ஒப்பந்தத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஹட்சன் நிறுவன மனிதவள மேம்பாட்டு பொதுமேலாளர் ஆர்.நரசிம்மகண்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார், கால்நடை பராமரிப்பு பிரிவுத் தலைவர் ஆர்.விஜயலட்சுமி, ஹட்சன் நிறுவன கால்நடைப்பிரிவு மேலாளர் டாக்டர் எம்.முருகேசன், சட்டப்பிரிவு உதவி மேலாளர் ஆர்.ரோஸ்பிளசட்கிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கடலூரில் மீனவர் வலையில் சிக்கிய வினோத பாம்புகள் : ஆய்விற்கு பின் மீண்டும் ஆற்றில் விடப்பட்டன


 
 
கடலூர் : 

             புதுச்சேரி அருகே உப்பனாற்றில் மீனவர் வலையில் சிக்கிய பாம்புகள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஆய்விற்கு பின், விஷத்தன்மை அற்றவை என்பதை உறுதி செய்ததால், மீண்டும் உப்பனாற்றில் விடப்பட்டன.


              புதுச்சேரி மாநிலம் மூர்த்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 17ம் தேதி இரவு உப்பனாற்றில் மீன்பிடித்த போது, வலையில் 40க்கும் மேற்பட்ட பாம்புகள் சிக்கின. தகவலறிந்த கடலூர் வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த், 18 பாம்புகளை பிடித்து தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தார். பூனம்சந்த் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை அதிகாரி துரைசாமி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் சீனுவாசன் ஆகியோர், பாம்புகளை பார்வையிட்டனர்.


ஆய்வு செய்த பேராசிரியர் சீனுவாசன் கூறியதாவது

             தண்ணீர் பாம்பிற்கும், கடல்வாழ் பாம்பிற்கும் இடைப்பட்ட இனம். இவை விலங்கியல் துறையில், "செரிபிரஸ் ஸ்டேசிஸ்' வகையை சேர்ந்தது. இதன் முகம் நாய் போன்றும், வாயில் கூறிய பற்கள் இருப்பதாலும், நாயை போன்று உறுமும் தன்மை கொண்டவை என்பதால் "டாக் பேஸ்டு எஸ்யூரிஸ் ஸ்நேக்' ( நாய் முகம் கொண்ட உவர் நீர் வாழ் பாம்பு) எனக் கூறப்படும். ஆறும், கடலும் சேரும் பகுதிகளில் வாழும். குறிப்பாக மாங்குரோவ் காடுகள் உள்ள பகுதிகளில் அதிகம் இருக்கும். விஷத் தன்மை அற்றது. முதலைகளை போன்று இதன் தோல், சொரசொரப்பாக இருக்கும். மீன்களே இதன் பிரதான உணவாகும். முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். 

              ஒரு பருவத்திற்கு ஆறு முதல் எட்டு முட்டைகள் இடும். இதன் நீளம் நான்கு முதல் ஆறு அடி இருக்கும். எட்டு முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழும். தற்போது மீனவர் வலையில் சிக்கிய பாம்புகளுக்கு நான்கு வயது இருக்கும். இந்த வகை பாம்புகள், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலக் காட்டிலும், புதுச்சேரி காரைக்கால் அரசலாறு கடலில் இணையும் பகுதியில் உள்ள மாங்குரோவ் காட்டிலும் அதிக அளவில் உள்ளன. இவ்வாறு சீனுவாசன் கூறினார். இப் பாம்புகள் விஷத் தன்மை அற்றவை என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, வன விலங்கு ஆர்வலர் வீட்டில் இருந்த 18 பாம்புகளையும் வனத்துறையினர் பிடித்துச் சென்று, மூர்த்திக்குப்பம் உப்பனாற்றில் விட்டனர்.

Read more »

கடலூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தலைவர் ஆவேசம் அதிகாரிகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு


கடலூர்: 

            ஊராட்சி மன்ற கூட்டத்தைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் கூறும் குறைகள் அவர்களுக்கு தெரியாமல் போகிறது என ஊராட்சி மன்றத் தலைவி சிலம்புச்செல்வி குற்றம் சாட்டினார். மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் கடலூரில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. தலைவி சிலம்புச் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) தர்மசிவம் மற்றும் கவுன்சிலர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: 

சிலம்புச்செல்வி: 

               முக்கிய விழாக்களுக்கு மாவட்ட கவுன்சிலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுப்பதில்லை. மேலும் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு திட்ட அதிகாரி மற் றும் உயர் மட்ட அதிகாரிகள் வருவதில்லை. தொடர்ந்து ஊராட்சி கூட்டங்களை அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். அதனால் மக்கள் பிரதிநிதிகள் கூறும் குறைகள் அவர்களுக்கு தெரியாமல் போகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் "அடுத்த கூட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவில்லையெனில் கூட்டத்தை நடத்தக்கூடாது' என கருத்து தெரிவித்தனர்.

மதியழகன் (தி.மு.க.,): 

               மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் பயிரிடப்படாத தரிசு நிலங்கள் மட் டுமே வீட்டு மனைகளுக்கு அனுமதிக்க வேண்டும். ஆனால் விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விவசாய விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதால் விளை நிலங்கள் குறைந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத் தக் கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு தெரியப் படுத்த வேண்டும்.

சிலம்புச்செல்வி: 

             மூன்று ஆண்டுகள் பயிரிடப்படாத தரிசு நிலங்களை தவிர்த்து மற்ற விளை நிலங்களில் வீட்டுமனை போடக்கூடாது. அப்படி போடப்பட்டுள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தி அதன் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். உடன் கவுன்சிலர்கள் "அடுத்த ஊராட்சி கூட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைக்க கூடாது' என்றனர்.

ராஜேந்திரகுமார் (தி.மு.க.,): 

                தவளக்குப்பம் வழியாக அரியாங்குப்பத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும். இப்பகுதி வழியாக சென்ற பஸ் தடம் எண்.26 நிறுத்தப்பட்டுள்ளதால் ரெட்டிச்சாவடி, அரியாங்குப்பம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

போக்குவரத்து அதிகாரி: 

               இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயகாந்தன் (அ.தி.மு.க.,):

             தற்போது மழைக் காலம் துவங்க உள்ளது என்பதால் ஏரி, குளம், வாய்க்கால் கரைகளை பலப்படுத்த காடு வளர்ப்பு திட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்களுக்கு தலா 10 ஆயிரம் மரக் கன்றுகளை கொடுத்தால் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.

வனத்துறை அதிகாரி: 

            எங்களிடம் மரக்கன்றுகள் கேட்டால் நிச்சயம் வழங்குவோம்.

சண்முகம் (பா.ம.க.,): 

            சிப்காட் பகுதியில் அடிக் கடி விபத்துக்கள் நடப்பதால் அங்கு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தற்போது விருத்தாசலம் வழியாகச் செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலையில் காரைக்காடு வழியாக செல்வதால் அதிக போக்குவரத்து காரணமாக தினமும் விபத்துகள் நடக்கிறது. அப்பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும். வீராணம், பெருமாள் ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து வருகிறது. 47 அடி ஆழமுள்ள வீராணம் ஏரி தற் போது 15 அடி ஆழம் மட்டுமே உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தை ஒட்டிய காவிரி ஆற்றின் கரையோர பகுதியை பலப் படுத்த மத்திய அரசு 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கரையை பலப்படுத்த வீராணம் மற்றும் பெருமாள் ஏரியில் மண் எடுக்க வேண்டும். இதனால் ஏரியும் தூர்வாரப்படும். மாவட்டத்தில் நிலத் தடி நீர் மட்டமும் உயரும்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு: அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்: 

          ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர்கள் குடியிருப்பை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்வையிட்டார்.

             ஸ்ரீமுஷ்ணம் மற்றும் ஸ்ரீபுத்தூர் பகுதியில் 88ம் ஆண்டு தாட்கோ மூலம் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராஜேந்திரன், தனி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஸ்ரீபுத்தூர் மற்றும் ஸ்ரீவக்காரமாரி பகுதியில் உள்ள இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை பார்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட காங்., எஸ்.சி, எஸ்.டி., பிரிவு தலைவர் கலியபெருமாள், நகர தி.மு.க., கூடுதல் செய லாளர் கலியபெருமாள், மூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்க ள் பூச் சந்திரன், தமிழ்வாணன் உடனிருந்தனர்.

Read more »

விருத்தாசலம் வட்டார "முந்திரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்'

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் வட்டார விவசாயிகள் ஒட்டு முந்திரி நடவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                விருத்தாசலம் வட்டாரத்தில் முந்திரியில் நெருக்கு நடவு மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு எக்டர் காலி நிலத்தில் 5க்கு 4 இடைவெளியில் 500 முந்திரி ஒட்டுச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.மொத்த மானியமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு எக்டருக்கு 32 ஆயிரத்து 850 ரூபாய்க்கு  வழங்கப்படுகிறது.

                 முதல் ஆண்டில் 19 ஆயிரத்து 710 ரூபாய்க்கு முந்திரி ஒட்டு செடிகள், இடுபொருட் கள், நடவு மற்றும் பராமரிப்பு செலவும், இரண்டாம் ஆண்டிற்கு 6,570 ரூபாய் மதிப்பிற்கும், மூன்றாம் ஆண்டிற்கு 6,570 ரூபாய் மதிப்பிற்கும் மானியம் வழங்கப்படுகிறது.ஆர்வமுள்ள விவசாயிகள் கம்யூட்டர் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ் போர்ட் சைஸ் புகைப் படத்துடன் துறை களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் தேவைப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இந்த பதிவேட்டில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

Read more »

சேத்தியாத்தோப்பு காணூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேத்தியாத்தோப்பு:

            சேத்தியாத்தோப்பு அடுத்த காணூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுண் டேஷன் தொண்டு நிறுவனம் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காணூர் துவக்கப் பள்ளியில் நடந்தது. 

               முகாமிற்கு ரிசோர்ஸ் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் வேளாங்கண்ணி தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியை ஜெயசுந்தரி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மின்னல்கொடி நாராயணசாமி முகாமை துவக்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஜான் பிடரிக், கிருத்திகா தேவி மற்றும் பணியாளர்கள் ஜேன் ஆரோக்கியசாமி, கலைவாணன் ஆகியோர் கண் பரிசோதனையும்,  சிகிச்சையும் அளித்தனர்.நாராயணசாமி, அரிகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், கவிதா, செல்வன், தங்கசாமி, பன்னீர்செல்வம் ஆசிரியைகள் ஜெயராக்கினி, ஜூலியட் சங்கீதா பங்கேற்றனர்.முகாமில் 120 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 பேர் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். சிவக்குமார் நன்றி கூறினார்.

Read more »

பேரிடர் தயார் நிலை, மேலாண்மைத்திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா

கடலூர்: 

           பேரிடர் தயார் நிலை மற்றும் மேலாண்மைத் திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா கடலூரில்  நடந்தது.

             நாணமேடு ஊராட்சி தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., முத்தையா முன்னிலை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார். சுனாமி மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கிராம மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகம் பயிற்சி நடத்தி வருகிறது. அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் 4 மாநிலமான தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஒரிசா ஆகிய கிராம பஞ்சாயத்துக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுனாமி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாணமேடு கிராமத்தை முன்னுதாரணமாக எடுத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

விழாவில் மேலாண் மைத்திட்ட கையேட்டை காந்திகிராம கிராம பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பழனிதுரை வெளியிட்டு பேசியதாவது:

            சுனாமியைத் தொடர்ந்து ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கையும், ஆக்ஷன் எய்ட் இந்தியா நிறுவனமும் புயல், மழை, வெள்ளம்  பேரிடர்களினால் பாதிக்கப்பட்டு வரும் மக்களை மீட்பு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்ட நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் நாணமேடு கிராமத்தை முன்மாதிரியாக தேர்வு செய்து செயல்பட பயிற்சி அளிக்கப் பட்டது. இக்கிராமத்தில் 5 குழுக் கள் உள்ளன.  

              பஞ்சாயத்து குழுக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர சமூக குழுக்களுக்கும் பேரிடர் தயார் நிலை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளில் ஒரு முன்மாதிரியாக செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் காலங்களில்  பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இத்திட்டம் உதவும்.இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் பழனிதுரை பேசினார். சத்யபாபு நன்றி கூறினார்.

Read more »

வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரிகலெக்டருக்கு மனு

சிறுபாக்கம்: 

           வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரி நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

நேரு இளைஞர் மன்றத் தலைவர் கணேஷ்ராம், கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு:

              பெரியநெசலூர் ஊராட்சியில் விவசாயத்திற்கும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக விளங்கி வரும் பெரிய ஏரியாகும். இதனைச் சுற்றியுள்ள விளம்பாவூர், களத்தூர், குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி தூர்ந்து காணப்படுவதால் மழைக் காலங்களில் உடனுக்குடன் நீர் வெளியேறுவதால் ஏரி வறண்டு விடுகிறது. இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு அறுவடை காலத் திற்கு நீர் இல்லாமல் அவதியடைகின்றனர். ஏரியின் கண்மாய்கள் தூர்ந்துள்ளதால் அதிகளவு நீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே ஏரியை ஆழப்படுத்தியும், மதகுகள் மற்றும் கண் மாய்களை சீரமைத்துத் தர வேண்டும் என  மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நிரந்தர முதல்வர் நியமிக்க கோரி சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கிள்ளை: 

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமிக்கக் வலியுறுத்தி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.நேற்று கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்லூரிக்கு  நிரந்தர முதல்வர் மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான கல்லூரி வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் விடுதிகளுக்கு செல்லும் சாலையை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

Read more »

கடலூர் பாரதி சாலையில் மீண்டும் "மெகா' பள்ளம்

கடலூர்: 

             கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்து வருகிறது. 

            கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் உட்லண்ட்ஸ் ஓட்டல் சிக்னல் அருகே பூமிக்கடியில் செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 4ம் தேதி உடைப்பு ஏற்பட்டு தார் சாலை ஐந்து அடி ஆழத்திற்கும், நான்கு அடி அகலத்திற்கும் உள்வாங்கியது. உடைப்பு பகுதியில் போலீசார் தடுப்பு கட்டைகளை போட்டு தடை செய்தனர். நகராட்சி ஊழியர் கள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, பள்ளத்தில் மணலை கொட்டி சாலை மட்டத்திற்கு கான்கிரீட் கலவை கொட்டி சமப்படுத்தி கடந்த 15ம் தேதி முதல் வாகனங்கள் செல்லத் துவங்கின. 

              இந்நிலையில் கடந்த 4ம் தேதி பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மீண்டும் மூன் றடி ஆழத்திற்கு சாலை உள் வாங்கியது. போக்குவரத்து மிகுந்த நேரத்தில் சாலை உள்வாங்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதித்தது. உடன் போக்குவரத்து போலீசார் சாலை உள் வாங்கிய பகுதியில் தடுப்பு ஏற்படுத்தினர். கடந்த 4ம் தேதி சாலை உள் வாங்கிய பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை முழுமையாக சரி செய்யாததாலும், பள்ளத்தை முறையாக மூடி "கான்கிரீட்' போடாததாலும் தற்போது மீண்டும் சாலை உள்வாங்கியது.

Read more »

சிதம்பரத்தில் இருந்து கோவிலாம்பூண்டிக்கு இயக்கியபஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை

கிள்ளை:

              சிதம்பரத்தில் இருந்து பள்ளிப்படை வழியாக கோவிலாம்பூண்டிக்கு இயக்கிய அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிதம்பரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அரசு பஸ்சில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் சிதம்பரத்தில் இருந்து கந்தமங்கலம் வழியாக கோவிலாம்பூண்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை.

                காலை 8.30, மதியம் 1.30 மற்றும் மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து சென்ற தடம் எண். 9 அரசு பஸ்சை கடந்த சில மாதங்களாக நிறுத்தி விட்டனர். இதனால் கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் மற்றும் பள்ளிப்படையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் இயக்கிய பஸ்சுடன் கூடுதலாக பள்ளி நேரத்திற்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கோவிலாம்பூண்டி ஊராட்சி தலைவர் சிவசுப்ரமணியன், பள்ளிப் படை ஊராட்சி தலைவர் தனலட்சுமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் துரை ரத்தினவேல்  மற்றும் பொதுமக்கள் தனித்தனியே அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

சேத்தியாத்தோப்பு சாலை விரிவாக்கத்திற்கு அனுமதியின்றி மணல் நடவடிக்கை கோரி கலெக்டருக்கு விவசாயிகள் மனு

சேத்தியாத்தோப்பு: 

             மணல் குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.

இதுகுறித்து துல்லிய பண்ணை  விவசாயிகள் சங்கத் தலைவர் கூடலையாத்தூர் அப்பாதுரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

            காட்டுமன்னார்கோயில் வட்டம் முடிகண்டநல்லூர் இணைப்பு சாலையில் காவாலகுடி, கூடலையாத்தூர் வரை சுமார் 3 கி.மீ.,  தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க பணியின் போது 3 மீ., நீளம் 3 மீ., ஆழம் வரை தோண் டப்பட்டது. பின்னர் மணல் குவாரியிலிருந்து மணல் கொண்டு வந்து அந்த பள்ளங்கள் மூடப்பட்ள்ளது.

             இதனை சரிசெய்ய 2 ஆயிரம் லாரி மணல் கொட்டப்பட்டுள்ளது. இந்த மணல் அரசின் அனுமதியின்றி எடுத்து கொட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு இம்மணல் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு விலை நிர்ணயம் செய்து மணல் விற்றனரா அல்லது அதிகாரிகளின் புரிதல் தன்மையால் இலவசமாக கொடுத்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் நகராட்சி சைக்கிள் நிறுத்தத்தில் கூரையின்றி வாகனங்கள் வீணாகும் அவலம்

சிதம்பரம்: 

           சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் நகராட்சி சைக்கிள் நிறுத்தத்திற்கு மேல் கூரை (ஷெட்) அமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகிறது. சிதம்பரம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்ளை பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சைக்கிள் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் சைக்கிள் நிறுத்தத்தில் மேல் கூரை (ஷெட்) அமைக்கப்படாமல் திறந்தவெளி மைதானமாக உள்ளது.

                   சைக்கிளுக்கு நாள் ஒன்றுக்கு 3 ரூபாயும், பைக்குகளுக்கு 5 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நகராட்சிக்கு அதிக வருமானம் கிடைத்தும் கூட நகராட்சி இதுவரை ஷெட் அமைக்க அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரண நாட்களை விட மழைக் காலங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் குளம் போல் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இது தொடர்பாக நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் பல முறை கோரிக்கைகள் எழுப்பியும்  நடவடிக்கை இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஷெட் அமைக்க நகராட்சி மூலம் 15 லட்சம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால் இன்னமும் அது ஏட்டளவில் மட்டுமே இருந்து வருகிறது. சாதாரண அந்தஸ்தில் உள்ள நகராட்சியில் கூட சைக்கிள் நிறுத்தங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா மையமாகவும், தேர்வு நிலை நகராட்சியாகவும் உள்ள சிதம்பரத்தில் மிக மோசமான நிலையில் இருப்பது வேதனையிலும் வேதனை.

Read more »

பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தில் முன் விரோத தகராறு: 15 பேர் மீது வழக்கு


பண்ருட்டி: 

            முன்விரோதம் காரணமாக வாலிபரைத் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

             பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தில் கடந்த மே 22ம் தேதி நடந்த வாலிபால் போட்டி நிறைவு விழாவில் இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் பரிசு வழங்கினார். அப்போது  ஊராட்சி  தலைவர் எழுமலையின் ஆதரவாளர் வெற்றிச்செல்வன் அவரை கிண்டல் செய்தார். இதனால் கார்த்திகேயன் ஆதரவாளர்களுக்கும், ஊராட்சி தலைவர் எழுமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பு புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சமாதானமாகச் சென்றனர்.

                   இந்நிலையில் கடந்த மாதம் 30ம்தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் இரு தரப்பிலும் 35 பேர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  நேற்றுமுன்தினம் இரவு  கார்த்திகேயன் ஆதரவாளர்கள் ஊராட்சி தலைவர் எழுமலை வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் வெற்றிச்செல்வனை (29) தாக்கினர். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வெற்றிச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் முருகன், கார்த்திகேயன், ஆடலரசன், விவேக்,  பூவராகமூர்த்தி, ராஜன் உட்பட 15 பேர் மீது கொலை மிரட் டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Read more »

கடலூர் கபடி வீராங்கனைக்கு பாராட்டு

கடலூர்: 

            இந்திய சப் ஜூனியர் பெண்கள் கபடி அணிக்கு கடலூர் வீராங்கனை நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

               அகில இந்திய சப் ஜூனியர் கபடி போட்டிகள் பாட்னாவில் மார்ச் மாதம் நடந்தது. அதில் தமிழக கபடி அணி சார்பில் பங்கேற்ற கடலூர் வீராங்கனை நந்தினி இந்திய சப் ஜூனியர் கபடி அணிக்கு தேர்வு பெற்றார். இதனையடுத்து லக்னோவில் நடந்த கபடி பயிற்சி முகாமில் பயிற்சி முடித்து திரும்பிய நந்தினியை மாநில கபடி கழக துணைத் தலைவர் வேலவன், மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் சுப்ரமணி, செயலாளர் ராமமூர்த்தி, பயிற்சியாளர் நடராஜன், புஷ்பராஜ் மற்றும்  உடற்கல்வி பேராசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior