உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 21, 2010

தஞ்சைப் பெரிய கோயிலின் முன்மாதிரி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்


சுதைகளால் ஆன திருவதிகை கோயில் விமானம் (கோப்புப்படம்).
 
பண்ருட்டி:

                 பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து, அதே சாயலில் தஞ்சைப் பெரிய கோயில் கருவறை விமானத்தை இராஜராஜசோழன் கட்டியுள்ளதாக வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியுள்ளார். 

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் திருவதிகையில் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சங்க காலப் புகழ் படைத்ததும், முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டதும், முதல்முதலில் தேர் உருவான திருத்தலமாகவும் திருவதிகை வீரட்டானம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  பஞ்ச பாண்டவருள் ஒருவரான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு தென்னகம் வந்தபோது திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரரைக் கண்டு கைதொழுதான் என வில்லிபாரதப் பாடல் கூறுகிறது. 

                         இத்தகைய பெருமைகளைக் கொண்ட திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலைக் கண்ட பிறகே அதே அமைப்பில் தஞ்சை பிரகதீசுவரர் கோயிலை இராஜராஜ சோழன் கட்டினார் என்று கூறப்படுகிறது. 

இது குறித்து தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது: 

                  சிற்பக் கலைகளிலும், கட்டடக் கலைகளிலும் புதுமைகளைப் படைத்தவர்கள் பல்லவ மன்னர்கள் என்பது வரலாற்று உண்மை. பல்லவர்களுக்கு பின் ஆட்சி பிரிந்த சோழ மன்னர்களும் உலகம் போற்றும் உன்னதமான கலைப் படைப்புகளை உலகுக்குப் படைத்தளித்துச் சென்றுள்ளனர். அவற்றில் 1000-வது ஆண்டு விழா காணப்பெறுவதும், உலகோரால் போற்றிப் பாராட்டப்படுவதுமான அதிசயம் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் ஆகும். சென்ற இடமெல்லாம் வெற்றிமேல் வெற்றிகளைப் பெற்ற சோழ மாமன்னன் இராஜராஜனின் (கி.பி. 985-1014) ஆட்சிக் காலத்தில்தான் இந்த மகோன்னதக் கலைப் படைப்பான தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. 

                 கி.பி 1003-ல் தொடங்கப்பட்டு கி.பி 1009-ல் இக்கோயில் நிறைவுபெற்றது. 190 அடி உயரமுள்ள கருவறை விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 35 சிறு கோயில்கள் அடங்கிய சிறப்பம்சங்களைக் கொண்டது. முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டது.  இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில், தஞ்சைப் பெரிய கோயிலை முன்மாதிரியாகக் கொண்டு கி.பி. 1030-ல் ஒரு சிவன் கோயிலைக் கட்டி கங்கை கொண்ட சோழீச்சுரம் எனப் பெயர் சூட்டினார். 100 அடி அகலம், 340 அடி நீளம், 160 அடி உயரமுள்ள விமானச் சிகரம், அதனைச் சுற்றிலும் அழகிய சிற்பங்கள் அமையப்பெற்ற அற்புதக் கோயிலாக இன்றும் போற்றப்படுகிறது. இக்கோயிலும் கருங்கற்களால் கட்டப் பெற்றது. 

               ஆனால் இவ்விரண்டு கோயில்களுக்கும் முன்மாதிரியாக அமைந்த கோயிலே திருவதிகை வீரட்டானம். இக்கோயில் அமைப்பைக் கண்ட பிறகே தஞ்சையில் பெரிய கோயிலை இராஜராஜ சோழன் கட்டினான். பல்லவர்களின் ஆட்சி தொடக்கத்தின் போது தமிழகத்தில் 300 சிவன் கோயில்கள் மிகச்சிறிய அளவில் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்தன. இவற்றைக் கருங்கற்கள், செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சுதை போன்றவற்றைப் பயன்படுத்தி  மாற்றியமைத்தது மட்டுமின்றி, மேலும் நூற்றுக்கணக்கான புதிய கோயில்களை சோழர்கள் கட்டினர். இவற்றில் ஒன்றுதான் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில். அட்ட வீரட்டானங்களிலும் தனித்தன்மை வாய்ந்த விமானம் இங்குதான் அமைந்துள்ளது. 

                பல்லவ மாமன்னன் மகேந்திரவர்மன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்த பிறகு, அவனுக்கு பிறகு ஆட்சி புரிந்த பரமேஸ்வரவர்ம பல்லவன் கருங்கற்கள் அமைப்பினால் கருவறையைக் கட்டி, செங்கல் சுண்ணாம்புச் சுதையால் விமானத்தை எழுப்பி அதில் அழகிய சிற்பங்களை அமைத்த பெருமை உடையவன். கி.பி 720-725-க்குள் கருவறையும், விமானமும் கட்டப்பட்டு விட்டன. பல சிறிய கோயில்களைக் கொண்ட இந்த கருவறை விமானம் 100 ச.மீ. பரப்பளவின் மீது 10.2 மீட்டர் நீளமும், 9.8 மீ. அகலமும் கொண்ட கருங்கற்களால் ஆன அதிட்டானத்தின் மீது உள்ள விமானம் 100 அடி உயரம் கொண்டது. அடிப்பாகத்தில் இருந்து உச்சிவரை சுதைச் சிற்பங்களைக் கொண்டது. இதுபோல் வேறு எங்கும் காண முடியாது. 

                             இந்த விமானம் பலமலைக்கோயில் என்கிற வகையைச் சேர்ந்தது. பல்லவர் கலையின் கொடுமுடி என்கிற பெருமையைப் பெற்றது' என்றார் பண்ருட்டி தமிழரசன்.

Read more »

என்.எல்.சி. ஸ்டிரைக்கினால் மின் உற்பத்தி பாதிப்பில்லை : நிதித்துறை இயக்குநர்


நெய்வேலியில் பேட்டியளிக்கும் என்எல்சி நிதித்துறை இயக்குநர் சேகர். உடன் (இடமிருந்து) நிர்வாகத் துறை பொது மேலாளர் பெஞ்சமின் ராயப்பன் மற்றும் முதன்மை மேலாளர் தியாகராஜன்
 
நெய்வேலி:

                 நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தால் உற்பத்தி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை எனவும், நிரந்தரத் தொழிலாளர்களும், பொறியாளர்களும், அதிகாரிகளும் முழு ஒத்துழைப்புடன் பணியாற்றுவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் சேகர் திங்கள்கிழமை கூறினார்.

                   என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நிறுவனத்தின் நிர்வாகத் துறையின் கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிதித்துறை இயக்குநர் ஆர்.சேகர் திங்கள்கிழமை  அளித்தப் பேட்டி: 

                      "13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பல்வேறு வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்கிறது. ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளிக்கும் அவருக்கு அளிக்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் கூடுதலாக நாளொன்றுக்கு ரூ.270 முதல் 300 வரை நிர்வாகம் செலவு செய்கிறது. நாட்டில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களைக் காட்டிலும் என்எல்சியில்தான் அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுகிறது.

                    16-06-08 அன்று புதுதில்லியில் ஏற்பட்ட உடன்படிக்கையை அமல்படுத்த நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் என்எல்சியில் கூடுதலாக நாளொன்றுக்கு ரூ.28.85 வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையாக மருத்துவச் சிகிச்சைகள் பெறுவதை வகைசெய்யும் பொருட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 50 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சைப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

              இந்நிலையில் 19-09-10 அன்று மத்திய அரசின் உதவித் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், நிர்வாகத்தின் நிலையை ஏற்றுக் கொண்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தது.÷ஆனால் அதற்கு மாறாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடக்கியுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு  விரோதமானது.

                மேலும் மத்திய அமைச்சர் முன்னிலையில் 16-06-08 அன்று ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழில் அமைதியையும், நல்லுறவையும் காப்போம் என தொழிற்சங்கங்கள் உறுதியளித்தன.÷ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு மாறாக தற்போது வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைநிறுத்தத்தை கைவிட்டு, தங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன்கருதி உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என சேகர் கேட்டுக் கொண்டார்.

                        பேட்டியின் போது, நிர்வாகத் துறை பொதுமேலாளர் பெஞ்சமின் ராயப்பன், துணைப் பொதுமேலாளர் பெரியசாமி, முதன்மை மேலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப் பாசன விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. ​7 கோடி ஒதுக்கீடு

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முலம் கடன் வழங்குவதற்கு ரூ.​ 7 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                      தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனத்துக்காக 2010-11-ம் ஆண்டுக்கு,​​ ரூ.​ 7 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.​ இதில் தகுதி அடிப்படையில் 50 சதம் வரை மானியம் அளிக்கப்படும்.நெல்,​ ​ கரும்பு,​​ வாழை,​​ காய்கறி,​​ பழங்கள்,​​ பருப்பு வகைகள்,​​ எண்ணெய் வித்துகள்,​​ போன்றவற்றைச் சாகுபடி செய்ய சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்தக் கடன் வழங்கப்படும். பொதுச் சேவை மையங்கள் இயங்கி வரும் 16 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில்,​​ விவசாயிகள் தங்களது நிலங்கள் தொடர்பான கணினிச் சிட்டா அடங்கல்களை பெற்றுக் கொள்ளலாம்.​ இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.

                     குறிஞ்சிப்பாடி,​​ லால்பேட்டை உள்ளிட்ட 7 கூட்டுறவு வேளாண்மைச் சங்கங்களில் வேளாண் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.​ இவற்றில் மண் பரிசோதனை,​​ பாசன நீர் பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.​ இவற்றில் உரம்,​​ பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படும்.குறிஞ்சிப்பாடி,​​ ஆயிக்குப்பம்,​​ பெண்ணாடம்,​​ தொழுதூர்,​​ முட்லூர்,​​ கருங்குழி,​​ தீர்த்தனகரி,​​ கரைமேடு,​​ மோவூர்,​​ ஆவினன்குடி,​​ சேத்தியாத்தோப்பு,​​ வி.சாத்தமங்கலம் ஆகிய 12 தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில்,​​ விவசாய சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளன.​ இவற்றின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.​ பண்ணை இயந்திர மயமாக்கல் திட்டம் இவ்வாறு செயல்படுத்தப்படுகிறது.​ 

                         ​விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறையைப் சமாளிக்கும் வகையில்,​​ கரைமேடு,​​ ஆய்க்குப்பம்,​​ கருங்குழி,​​ தீர்த்தனகரி,​​ குறிஞ்சிப்பாடி ஆகிய 5 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில்,​​ கூட்டுப் பொறுப்புக்குழு,​​ சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு,​​ பசுமை ராணுவம் அமைக்கப்பட்டு உள்ளது. வேளாண் இயந்திரங்களில் பயிற்சி பெற்ற இவர்களைக் கொண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு இயந்திரம் மூலம் நடவு பயிற்சி அளிக்கப்படும்.​ பசுமை ராணுவம் மூலம் 500 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடவு செய்ய திட்டமிட்டு,​​ 140 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கணினிப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

கடலூர்:

                   அறக்கட்டளை மூலம் குறைந்த கட்டணத்தில் கணினிப் பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு,​​ முன்னாள் எம்எல்ஏவும் திமுக மாநில மாணவரணி அமைப்பாளருமான இள.புகழேந்தி அண்மையில் சான்றிதழ் வழங்கினார். 

                       கடலூர் புதுப்பாளையம் சி.சி.எஸ்.​ அறக்கட்டளை சார்பில் 70 மாணவ} மாணவியருக்கு,​​ குறைந்த கட்டணத்தில் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டது.​ இதில் பயின்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஸ்கோப் தொண்டு நிறுவனத் தலைமை நிர்வாகி சத்தியபாபு தலைமையில் நடந்தது.​  மாணவ மாணவியருக்குச் சான்றிதழ்களை,​​ முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி வழங்கி பாராட்டிப் பேசினார்.​ நிகழ்ச்சியில் சி.சி.எஸ்.​அறக்கட்டளை நிர்வாகி செல்வமுருகன்,​​ தலைமை பயிற்றுநர் ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ மாணவ } மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior