உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                 கால்நடை பராமரிப்புத் துறை மூலம், மத்திய அரசின் காப்பீட்டுப் பிரீமியத்தில் 50 சதவீத மானியத்துடன், கடலூர் மாவட்டத்தில் பசுக்கள் மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கால்நடைகளை வளர்போர், தங்களிடம் உள்ள கிடேரிகள், கறவை மாடுகள், கருவுற்ற மாடுகள், பால் வற்றிய மாடுகள் அனைத்தையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

                    கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாடுகளுக்கு காப்பீடு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யப்படும். இறக்கும் மாடுகள், நிரந்தரமாகக் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத மாடுகள், விபத்தில் சிக்கும் மாடுகள் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், தரம் உயர்த்தப்பட்ட கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள, கால்நடை மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு, மாடுகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

ரூ.15 கோடியில் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடலூர்:

                 ரூ.15 கோடியில் அமைக்கப்பட இருக்கும் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைப் பணி விரைவில் தொடங்கும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். விருத்தாசலம் வட்டம் மங்லம்பேட்டை பேரூராட்சியில், அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

இலவச கலர் டி.வி.க்களை வழங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

                  தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடியில் சாலைகள், பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 4 ஆண்டுகளில் ரூ.2.81 கோடிக்குப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ரூ.16 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

              உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 5,328 நபர்களுக்கு ரூ.16.68 கோடி மதிப்பில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மங்கலம்பேட்டையில் ரூ.44 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். மகப்பேறு நிதிஉவித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1,18,939 கர்ப்பிணிகளுக்கு ரூ.65.47 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4,84,110 குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1,941 பேருக்கு இலவச டி.வி.க்களும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். 

விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பேசுகையில், 

                      ""கடலூர் மாவட்டத்தில் 2,83,293 நபர்களுக்கு, 683.93 ஏக்கர் நிலம் வீட்டுமனைப் பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவித் தொகைகள் 57,379 நபர்களுக்கு மாதம் ரூ.400 வீதம் மாதந்தோறும் ரூ.2,29,51,600 வழங்கப்பட்டு வருகிறது என்றார். விழாவில் முன்னாள் எம்.பி. கணேசன், விருத்தாசலம் நகராட்சித் தலைவர் முருகன், மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் கோபிப்பிள்ளை, துணைத் தலைவர் ஆதம்அலி விருத்தாசலம் கோட்டாசியர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.75 ஆயிரத்தில் வீடு கட்ட முடியுமா?

கடலூர்: 

                கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.75 ஆயிரத்தில் வீடுகளைக் கட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 200 ச.அடி கொண்ட இந்த வீடுகளைக் கட்டுவதற்கு, தமிழக அரசு தலா ரூ.75 ஆயிரம் வழங்குகிறது. இதில் ரூ.40 ஆயிரம் ரொக்கமாகவும், மீதித் தொகைக்கு சிமெண்ட், இரும்புக் கம்பி, ஜன்னல், கதவு ஆகியவை அரசு மூலமாகவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

                    எனினும் ரூ.75 ஆயிரத்தில் இத்தகைய வீடுகளைக் கட்ட முடியுமா என்ற சந்தேகம் பயனாளிகள் மத்தியிலும், ஊராட்சி மன்றத் தலைவர்களிடமும் இருந்து வருகிறது. 200 ச.அடி வீடு கட்ட அரசு வழங்கும் பொருள்கள் நீங்கலாக, 8 ஆயிரம் செங்கல், 10 யூனிட் மணல், ஒரு யூனிட் கருங்கல் ஜல்லி மற்றும் பெயின்ட் செலவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பயனாளிகள் சித்தாள் வேலைகளைச் செய்து, 2 கொத்தனார்கள் 15 நாள்கள் வேலை செய்தால் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என்கிறார்கள்.

                     கடலூர் மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.13 ஆயிரமாகவும்,  மணல் ஒரு யூனிட் ரூ.1250 ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.2700 ஆகவும் (தூரத்துக்குக் தக்கபடி விலை மாறுபடும்) இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். கொத்தனார் கூலி நாளொன்றுக்கு ரூ.400. தனியார் கட்டுமானப் பணிகள் வழக்கம்போல் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கொத்தனார்கள் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. தற்போது வீடுகள் கட்டுவதில் 60 சதவீத செலவு, தொழிலாளர்களுக்கான கூலியாக இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

                ஆனால் அரசுத் தரப்பில், 200 ச.அடி பரப்பளவு கொண்ட இந்த வீடுகளை, ரூ.75 ஆயிரத்தில் நிச்சயம் கட்ட முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். வீடுகளைக் கட்ட பயனாளிகள் தங்கள் உடல் உழைப்பையும் நல்க வேண்டும். அரசுத் தரப்பில் பலருக்குக் கொத்தனார் வேலைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அரசு ரூ.75 ஆயிரம் கொடுக்கும்போது பயனாளிகள் தங்கள் பங்காக, ரூ.10 ஆயிரம் செலவிடக் கூடாதா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 

                 செலவு அதிகம் ஆகிவிடுமோ என்ற அச்சத்திலும், தொடக்கத்தில் கையிலிருந்து கொஞ்சமாவது பணம் செலவு செய்ய வேண்டியது இருக்குமே என்பதாலும், பயனாளிகள் சிலர் வீடுகளைக் கட்டுவதில் தயக்கம் காட்டுவதாகவும் விவசாயிகள் சங்கத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தெரிவிக்கிறார். 

                      கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் பலர் 100 நாள் வேலை திட்டத்தில் நாளொன்றுக்கு குறைந்தது ரூ.80 கூலி பெறுகிறார்கள். இத்திட்டத்தில், வீடுகளைக் கட்டுவதற்குக் கூடுதலாக ஆகும் செலவுக்காக, ரூ.50 ஆயிரம் வரை வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து, அதை 100 நாள் வேலைத்திட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாமே என்றும் கார்மாங்குடி வெங்கடேசன் ஆலோசனை தெரிவிக்கிறார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior